இலங்கையில் எல் நினோ தாக்கம் காரணமாக வறட்சி நிலவி வரும் நிலையில், எதிர்வரும் மாதங்களில் அதன் தாக்கம் மேலும் தீவிரமடையக்கூடும் என முன்னாள் சிரேஷ்ட புவியியல் துறை பேராசிரியர் கலாநிதி எஸ். அண்டனி நோர்பர்ட் தெரிவித்துள்ளார்.
மன்னார், அநுராதபுரம், பொலன்னறுவை, முல்லைத்தீவு மற்றும் மட்டக்களப்பு உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள நீர்த்தேக்கங்களின் நீர்க்கொள்ளளவு சுமார் 30 சதவீதமாகக் குறைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் நிலவும் வறட்சி காரணமாக 70,000 இற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளும் குடிதண்ணீர் விநியோகமும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் செப்டம்பர் மாதத்தில் எல் நினோவின் தாக்கம் உச்ச நிலையை அடையக்கூடும் எனவும், இதனால் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்படுவதுடன், மத்திய மலைநாட்டில் உள்ள நீர்த்தேக்கங்களின் நீர்மட்டமும் மேலும் குறையக்கூடும் எனவும் பேராசிரியர் எச்சரித்துள்ளார்.
எனினும், ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் ஏற்படக்கூடிய சூறாவளித் தாக்கங்களால் சில பகுதிகளில் மழைப்பொழிவு கிடைக்கக்கூடும் என்றும், அது தற்காலிக நிவாரணமாக அமையலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், டிசம்பர் மாதத்திற்குப் பின்னர் பெப்ரவரி, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் கடுமையான வறட்சி நிலவக்கூடும் எனவும், குறிப்பாக 2027ஆம் ஆண்டின் ஆரம்பப் பகுதியில் மோசமான வறட்சி நிலைமை ஏற்படக்கூடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலை தொடருமானால், 2027ஆம் ஆண்டின் பெரும் போக பயிர்ச்செய்கை நடவடிக்கைகள் பெருமளவில் பாதிக்கப்படும் அபாயம் காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போதைய நிலைமையை ஓரளவுக்குச் சமாளிக்க முடிந்தாலும், 2027ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் ஏற்படக்கூடிய வறட்சி நிலைமையை எதிர்கொள்ள மக்களும் தொடர்புடைய தரப்பினரும் முன்கூட்டியே தயாராக வேண்டும் எனவும் பேராசிரியர் வலியுறுத்தியுள்ளார்.
.jpg)