63 வயது மதிக்கத்தக்க ஆஸ்திரேலியப் பெண் சுற்றுலாப் பயணி ஒருவரின் அறைக்கதவின் கீழ் பாலியல் நடவடிக்கைக்கு அழைப்பு விடுத்து ஆங்கிலத்தில் எழுதப்பட்ட துண்டுப்பிரசுரங்களைத் திணித்த குற்றச்சாட்டின் பேரில், மூன்று இலங்கை நபர்கள் உனவட்டுன சுற்றுலாப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கைக்கு வருகை தந்த குறித்த பெண், உனவட்டுனவில் உள்ள பிரதான ஹோட்டல் ஒன்றில் ஒரு வாரத்திற்கும் மேலாகத் தங்கியிருந்ததாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
தெஹிவலை மற்றும் பாணந்துறைப் பகுதிகளைச் சேர்ந்த குறித்த மூன்று சந்தேகநபர்களும், ஆஸ்திரேலியப் சுற்றுலாப் பயணி தங்கியிருந்த அறைக்கு அருகிலுள்ள அறையிலேயே தங்கியிருந்ததாகப் பொலிஸார் விசாரணைகளில் கண்டறிந்துள்ளனர்.
சந்தேகநபர்கள் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட பாலியல் அழைப்புக் குறிப்புகளைப் பெண்ணின் அறைக்கதவின் கீழ் திணித்துள்ளனர்.
பெண் அளித்த புகாரைத் தொடர்ந்து, உனவட்டுன சுற்றுலாப் பொலிஸ் நிலைய அதிகாரிகள் மூன்று சந்தேகநபர்களையும் கைது செய்து மேலதிக விசாரணைகளுக்காக ஹபராதுவப் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
சந்தேகநபர்கள் காலி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவிருந்தனர்.
