உலகில் எண்ணற்ற பிரபலமான இடங்கள் உள்ளன. சில இடங்கள் அவற்றின் இயற்கை அழகுக்காக புகழ் பெற்றிருக்கும். சில இடங்கள் வரலாற்று சின்னங்களாலோ அல்லது மத வழிபாடுகளாலோ புகழ் பெற்றிருக்கும். ஆனால் தற்கொலை செய்து கொள்வதற்காகவே புகழ்பெற்ற ஒரு இடம் ஜப்பானில் உள்ளது உங்களுக்குத் தெரியுமா?
கர்ப்பிணி பெண்கள் சிறுவர்கள் இளகிய மனம் படைத்தவர்கள் இந்த பதிவை பார்க்க வேண்டாம்
ஆம் ஜப்பானில் உள்ள அகிகஹாரா வனத்தைதான் தற்கொலை காடு என்று அழைக்கின்றனர். வனத்தின் நுழைவு வாயிலிலேயே ‘உங்கள் குழந்தைகள், உங்கள் குடும்பம் மற்றும் உங்கள் பெற்றோரின் விலைமதிப்பற்ற பரிசான உங்கள் வாழ்க்கை பற்றி கவனமாக சிந்தியுங்கள்’ என்று எழுதப்பட்டிருக்கும். அப்படி என்ன மர்மம் இங்கு உள்ளது என்பது குறித்து விரிவாக பார்ப்போம்.சான் ஃபிரான்சிஸ்கோவின் கோல்டன் கேட் பாலம் மக்கள் அதிகமாக தற்கொலை செய்து கொள்ளும் இடங்களில் முதலாவது இடத்தில் உள்ளது. ஜப்பானில் உள்ள இந்த அகிகஹாரா காடு 2-வது இடத்தில் உள்ளது. இந்த இடம் அழகிய பசுமையான மரங்களால் சூழப்பட்டுள்ளது. இங்கு 300 ஆண்டுகளுக்கும் மேலான சில தனித்துவமான மரங்கள் உள்ளன. அகிகஹாரா காடு, பசுமையாக அடர்த்தியாக இருப்பதால், இது 'மரங்களின் கடல்' என்றும் அழைக்கப்படுகிறது. காடு இயற்கையாகவே அழகாக இருப்பதால், மலையேறுபவர்கள் மற்றும் சாகச ஆர்வலர்கள் இங்கு குவிகின்றனர். இங்கிருந்து ஃபியூஜி மலையின் அழகைக் காண ஏராளமானோர் வருகை தருகின்றனர். காட்டின் ஆபத்தான வரலாறு காரணமாக 2016-ல் வெளியான திகில் படமான தி பாரஸ்ட் படத்திற்கான இன்ஸ்பிரேஷனாக இந்த காடு இருந்துள்ளது.
அகிகஹாராவின் தற்கொலை விகிதங்கள் குறித்த புள்ளிவிவரங்கள் வேறுபடுகின்றன. ஏனென்றால் இந்த காடு மிகவும் அடர்த்தியானது என்பதால், இங்கு தற்கொலை செய்துகொள்வோரின் சில உடல்கள் பல ஆண்டுகள் வரை கண்டுபிடிக்கப்படாமல் போகலாம் அல்லது கிடைக்காமலேயே போகலாம். சில மதிப்பீடுகள் ஆண்டுக்கு 30 முதல் 100 பேர்வரை தங்கள் உயிரை இங்கு இழப்பதாக கூறுகின்றன. எவ்வாறாயினும், சமீபத்திய ஆண்டுகளுக்கான புள்ளிவிவரங்கள் கிடைக்கவில்லை. ஏனெனில் தற்கொலை இறப்புகளைத் தடுப்பதற்காக ஜப்பானிய அரசாங்கம் எண்களை வெளியிடுவதை நிறுத்திவிட்டது.
இந்த காடுகளில் உள்ள மரங்கள் இயற்கையாகவே பயமுறுத்தக்கூடியவை. இங்குள்ள மரங்களின் வேர்கள் காடு முழுவதும் பாம்பு போல ஊர்ந்து செல்கின்றன. மலையின் அடிவாரத்தில் அமைந்திருப்பதால், இதன் நிலம் சீரற்றதாகவும், பாறைகளாகவும், நூற்றுக்கணக்கான குகைகளால் துளையிடப்பட்டதாகவும் உள்ளது. இதன் கடினமான நிலப்பரப்பை விட, அங்கு நிலவும் அமைதியே அதிக அச்சத்தைத் தூண்டுகிறது. மரங்கள் மிகவும் இறுக்கமாக நிரம்பியிருப்பதால், காற்று வேகமாக அடிக்க முடியாது. மேலும் வனவிலங்குகள் குறைவாகவே உள்ளன. சில சுற்றுலா பயணிகள் திசைகாட்டிகள் உடைந்து போவது போன்ற விசித்திரமான நிகழ்வுகளையும், ஜிபிஎஸ் சாதனங்கள் மற்றும் ஸ்மார்ட்ஃபோன்கள் வேலை செய்யாமல் போவது போன்ற சிக்கல்களையும் இங்கு சந்திக்கின்றனர்.
2017-ஆம் ஆண்டில், ஜப்பானிய அரசாங்கம் அடுத்த தசாப்தத்தில் ஜப்பானின் தற்கொலை விகிதங்களை 30 சதவிகிதம் குறைக்கும் திட்டங்களை அறிவித்தது, 2015-ல் 100,000 பேருக்கு 18.5-ஆக இருந்த தற்கொலைகளின் எண்ணிக்கையை 2025-க்குள் 100,000 பேருக்கு 13-ஆகக் குறைக்க முடிவெடுத்தது. இந்த நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக அகிகஹாரா நுழைவாயிலில் பாதுகாப்பு கேமராக்கள் பொருத்துதல் மற்றும் ரோந்துகளை அதிகரிப்பது ஆகியவை அடங்கும். தற்கொலை தடுப்பு ஆலோசகர்களும் காவல்துறையினரும் காடு முழுவதும் உள்ள பல்வேறு பாதைகளில் "உங்கள் குழந்தைகள், உங்கள் குடும்பத்தைப் பற்றி கவனமாக சிந்தியுங்கள்" போன்ற செய்திகளை அறிவித்தும், பலகைகளில் எழுதியும் வைத்துள்ளனர்.
குடும்பத்தினரால் கைவிடப்பட்டு இந்த காட்டில் தற்கொலை செய்து கொண்டவர்களின் ஆன்மா மற்றும் துக்கமான ஆவிகள் இன்றும் இந்த காடுகளில் உலவிக் கொண்டிருப்பதாகவும், அவை பழிவாங்கும் மனப்பான்மை கொண்டுள்ளதாகவும், பார்வையாளர்களைத் துன்புறுத்துவதாகவும், சோகமாக இருப்பவர்களைத் தற்கொலைக்கு ஈர்ப்பதாகவும் சொல்லப்படுகிறது.
இப்பகுதியில் கூடாரங்களைக் கொண்டுவரும் பார்வையாளர்கள் தற்கொலை செய்துகொள்ளும் எண்ணம் கொண்டவர்கள் என்று போலீசார் கருதுகின்றனர். எனவே தடுப்பு ரோந்துப் பணியில் இருப்பவர்கள், முகாமில் இருப்பவர்களுடன் மெதுவாகப் பேசி அவர்களை காட்டை விட்டு வெளியேற்றுகின்றனர்.