இந்தியாவின் குஜராத்தின் ஆனந்த் மாவட்டத்தில் உள்ள நீதிமன்றம், ஏழு வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் குற்றவாளிகளுக்கு இரட்டை மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
ஆனந்த் மாவட்டத்தின் காம்பட் கிராமப்புற பகுதியில் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட கொடூரமான சம்பவம் அக்டோபர் 28, 2019 அன்று வெளிச்சத்துக்கு வந்தது.
குஜராத்தி புத்தாண்டின் போது பிஸ்கட் கொடுத்து சிறுமியை தாதோ என்கிற அர்ஜுன் அம்பலால் கோஹெல் (24) கடத்திச் சென்று வன்கொடுமை செய்தது விசாரணையில் தெரியவந்தது. குற்றம் சாட்டப்பட்டவர் மீது ஒன்றரை மாதங்களுக்குள் பொலிஸார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இந்நிலையில் தற்போது இந்த தீர்ப்பு வந்துள்ளது.
குஜராத்தின் நீதித்துறை மற்றும் காவல் அமைப்பின் செயல்திறனையும், குற்றங்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுப்பதற்கான மாநில அரசின் உறுதிப்பாட்டையும் இந்த முடிவு குறிக்கிறது என அம்மாநில உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்வி பாராட்டினார்.
இரட்டை மரண தண்டனை என்பது மேல்முறையீடு மூலம் உயர் நீதிமன்றத்தில் ஒரு குற்றத்தில் அவர் விடுவிக்கப்பட்டாலும், அவர் மரண தண்டனையை எதிர்கொள்வதை உறுதி செய்கிறது. இந்தியாவில் இந்த இரட்டை மரணதண்டனை தீர்ப்பு அரிதான ஒன்றாக பார்க்கப்படுகிறது.