அரச ஊழியர்களின் அடிப்படை சம்பளம் பல வருடங்களின் பின்னர் எங்களுடைய அரசாங்கத்தினால் அதிகரிக்கப்பட்டது என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
கம்பஹாவில் இடம்பெற்ற மக்கள் பேரணி ஒன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
நாட்டை முன்னகர்த்தி செல்ல அரச ஊழியர்களின் பங்களிப்பு மிக முக்கியமானதாகும். அரசதுறையில் தொழில் ஒன்றை பெற்றுக் கொள்ள வேண்டும் என்றால் முன்புபோல அரசியல்வாதிகளிடம் சென்று விண்ணப்பம் வழங்க வேண்டியதில்லை.
அரசியல்வாதிகளிடத்தில் கோரிக்கை முன்வைக்க வேண்டியதில்லை. கடிதம் ஒன்றை பெறுவதற்காக அமைச்சர்களின் பின்னால், நாடாளுமன்ற உறுப்பினர்களின் பின்னால் யாரும் செல்ல வேண்டிய அவசியம் இல்லை.
தற்போது 30 ஆயிரம் புதிய அரச ஊழியர்களின் அரச துறைக்குள் உள்ளெடுப்பதற்கு நாங்கள் எதிர்பார்த்துள்ளோம். விண்ணப்பங்கள் கோரப்படும் போது, அதற்கு விண்ணப்பித்து, பரீட்சை எழுதி சிறந்த மதிப்பெண்களைப் பெற்று அரச சேவைக்குள் உள்நுழைய முடியும்.
சிறந்த ஆளுமையுள்ள அரச ஊழியர்களை அரச துறைக்குள் உள்வாங்க நாங்கள் ஆயத்தமாக இருக்கின்றோம்.
இதேவேளை, பல வருடங்களின் பின்னர் எமது அரசாங்கத்தினால் அரச ஊழியர்களின் அடிப்படைச் சம்பளம் உயர்த்தப்பட்டுள்ளது. தேர்தல் காலத்தில் அரச ஊழியர்களின் சம்பளம் உயர்த்தப்படும் என்ற எமது வாக்குறுதிகளை நாங்கள் நிறைவேற்றியுள்ளோம் என குறிப்பிட்டுள்ளார்.