அரச வங்கி ஒன்றில் அடகு வைக்கப்பட்ட தங்க நகைகளுக்கான போலி பற்றுச்சீட்டையும் குறித்த பற்றுச்சீட்டில் உள்ளவாறு தேசிய அடையாள அட்டையையும் காண்பித்து தனியார் பைனான்ஸ் கம்பெனி ஒன்றில் 22 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்து சென்ற இருவரை ஹிங்குருகடுவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.
31,40 வயதுடைய பலாங்கொடை மற்றும் கிரியெல்ல பகுதியைச் சேர்ந்த இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று மதியம் பதுளை நகரில் உள்ள அரச வங்கி ஒன்றில் அடகு வைக்கப்பட்ட தங்க நகையின் பற்றுச்சீட்டையும், நபர் ஒருவருக்கு சொந்தமான போலியான தேசிய அடையாள அட்டையையும் காண்பித்து அரச வங்கி ஒன்றின் தாங்கள் 30 லட்சம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகளை அடகு வைத்துள்ளதாகவும் அதை மீட்க சுமார் 22 லட்சம் ரூபாய் பணம் வேண்டும் எனவும் தாங்கள் அந்த பணத்தை தந்தால் அரச வங்கியில் உள்ள தங்க நகைகளை மீட்டு தங்களது பைனான்ஸ் கம்பெனியில் அடகு வைப்பதாக குறித்த பைனான்ஸ் கம்பெனி ஊழியரிடம் சந்தேக நபர் தெரிவித்துள்ளார்.
பின்னர் பைனான்ஸ் கம்பெனியின் ஊழியர் மேலதிகாரிகளிடம் அனுமதி பெற்று 22 லட்சம் ரூபாய் பணத்தை குறித்த நபரிடம் கொடுத்து, தானும் அவர்களுடன் அரச வங்கியினுள் சென்றுள்ளார்.
பணத்துடன் குறித்த நபர் அரச வங்கியினுள் சென்றவுடன் பைனான்ஸ் கம்பெனி ஊழியர் அரச வங்கிக்கு வெளியில் நின்றதாகவும், பின்னர் சந்தேக நபர் பணத்துடன் வெளியே வந்து வெளியில் ஆயத்தமாக இருந்த தனது நண்பருடன் மோட்டார் சைக்கிளில் ஏறி பணத்துடன் தப்பிச் சென்றுள்ளார்.
தப்பிச் சென்ற சந்தேக நபர்கள் பசறை நகரின் ஊடாக ஹிங்குருகடுவ வழியில் சென்றுள்ளனர். இதன்போது குறித்த மோட்டார் சைக்கிள் மீதும் நபர்கள் மீதும் சந்தேகம் கொண்ட ஹிங்குருகடுவ பகுதியைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் ஹிங்குருகடுவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி செனரத் பண்டாரவிற்கு தொலைபேசியில், வீதியில் செல்லும் மோட்டார் சைக்கிள் மீதும் மோட்டார் சைக்கிளில் பயணிக்கும் நபர்கள் மீதும் தனக்கு சந்தேகம் ஏற்படுவதாகவும் குறித்த நபர்கள் ஹிங்குருகடுவ கரமட்டிய வீதியில் பயணிப்பதாகவும் உடனடியாக பொலிஸாரை வருமாறு கூறி விட்டு குறித்த பெண் வீதியால் வந்த வேறொரு மோட்டார் சைக்கிளில் ஏறி குறித்த நபர்களை பின்தொடர்ந்தது சென்றுள்ளார்.
இருப்பினும் தப்பிச்சென்ற சந்தேக நபர்கள் ஹிங்குருகடுவ கரமட்டிய வீதியில் கரமட்டிய எனும் கிராமத்திற்கு மாத்திரமே செல்ல முடியும் என்பதை அறிந்திருக்கவில்லை.
சந்தேக நபர்கள் கரமட்டிய வீதியின் ஓரமாக மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு அவ்விடத்தில் இருந்தவர்களிடம் வீதி தொடர்பாக விசாரிக்கும் போது உடன் அவ்விடத்திற்கு பின்தொடர்ந்தது சென்ற ஹிங்குருகடுவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உட்பட குழுவினர் சந்தேக நபர்களை பிடித்து சோதனைக்கு உட்படுத்திய போது கைப்பை ஒன்றில் வைக்கப்பட்டிருந்த 22 லட்சம் ரூபாய் பணமும், 5 கையடக்க தொலைபேசிகளும், 2 வங்கி கடன் அடைகளையும், போலி தங்க முலாம் பூசப்பட்ட நகைகள், 4 தேசிய அடையாள அட்டைகள், வங்கி பற்றுச்சீட்டுகள் மற்றும் அடகு வைக்கப்பட்ட வங்கி பற்றுச்சீட்டுகள், 20 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள், மோட்டார் சைக்கிள் ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பின்னர் சந்தேக நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது கல்கிஸ்ஸ, இரத்தினபுரி ஆகிய பகுதிகளில் உள்ள தனியார் வங்கிகளில் மேற்குறிப்பிட்ட பாணியில் 27 லட்சம் ரூபாய், 20 லட்சம் ரூபாய் பணம் இவ்வாறு கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக் கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேக நபர்கள் இருவரையும் இன்றைய தினம் பசறை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் , சந்தேக நபர்கள் அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்தப்பட உள்ளதாகவும் ஹிங்குருகடுவ பொலிஸார் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணைகளை ஹிங்குருகடுவ பொலிஸார் மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இருப்பினும் இவர்கள் மீது சந்தேகம் கொண்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கிய பெண்ணை பாராட்ட வேண்டும் என பொலிஸார் தெரிவித்தனர்.
