புத்தளம் - நவகத்தேகம, வெலேவெவ பிரதேசத்தில் உள்ள உணவகம் ஒன்றுக்கு அருகில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் நான்கு பிள்ளைகளின் தந்தை ஒருவரை கொடூரமாக தாக்கி காயப்படுத்தியுள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த தாக்குதல் சம்பவம் நேற்று புதன்கிழமை (07) இடம்பெற்றுள்ளது.
36 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தந்தை ஒருவரே இவ்வாறு காயமடைந்துள்ளார்.
இது தொடர்பில் தெரியவருவதாவது,
நவகத்தேகம பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் உணவு பொதியை வாக்குவதற்காக நவகத்தேகம, வெலேவெவ பிரதேசத்தில் உள்ள உணவகம் ஒன்றிற்கு மோட்டார் சைக்கிளில் சென்றுக்கொண்டிருந்துள்ளார்.
இதன்போது குறித்த உணவகத்திற்கு சைக்கிளில் சென்றுக்கொண்டிருந்த நான்கு பிள்ளைகளின் தந்தை ஒருவர் பொலிஸ் கான்ஸ்டபிளின் மோட்டார் சைக்கிள் மீது மோதியுள்ளார்.
இதனால் பொலிஸ் கான்ஸ்டபிளுக்கும் நான்கு பிள்ளைகளின் தந்தைக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது.
தகராறின் போது பொலிஸ் கான்ஸ்டபிள், நான்கு பிள்ளைகளின் தந்தையை கொடூரமாக தாக்கியுள்ளார்.
காயமடைந்த நான்கு பிள்ளைகளின் தந்தை சிகிச்சைக்காக புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பில் புத்தளம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.