இந்தியாவின் கேரள மாநிலம் திருவனந்தபுரம் முத்தத்தரா ஸ்ரீவராகம் பகுதியை சேர்ந்த இளம்பெண் நீது (வயது31). இவர் திருவனந்தபுரத்தில் உள்ள பிரபல மென்பொருள் நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினீயராக பணியாற்றி வந்தார்.
இந்தநிலையில் அவர் தனது வயிற்று பகுதியில் இருந்த கொழுப்புகளை நீக்குவதற்காக திருவனந்தபுரம் கஜக்கூட்டம் பகுதியில் உள்ள தனியார் அழகுசாதன வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றார். இதற்காக அந்த வைத்தியசாலையில் நீதுவுக்கு கடந்த பிப்ரவரி மாதம் 22 ஆம் திகதி அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருக்கிறது.
அறுவை சிகிச்சை முடிந்து மறுநாள் வீடு திரும்பினார். வீட்டுக்கு வந்ததும் நீதுவுக்கு வாந்தி - மயக்கம் என பல உடல் உபாதைகள் ஏற்பட்டுள்ளது. மேலும் அவருக்கு ரத்த அழுத்தமும் மிகவும் குறைந்தது. இதையடுத்து நீதுவுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட வைத்தியசாலையில் அவரது கணவர் பத்மஜித் தொடர்பு கொண்டு பேசினார்.
ஆனால் ஞாயிற்றுக்கிழமை என்பதால் வைத்தியர்கள் இல்லை. ஆகவே மறுநாள் வருமாறு வைத்தியசாலை தரப்பில் கூறியிருக்கின்றனர். ஆனால் நீதுவின் உடல்நிலை மிகவும் மோசமாகியபடியே இருந்தது. இதனால் நீதுவை அவரது கணவர் வேறொரு வைத்தியசாலையில் அழைத்துச் சென்று அனுமதித்தார்.
அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். வென்டிலேட்டர் உதவியுடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்தநிலையில் நீதுவின் உடலில் ரத்தஓட்டம் சீராக இல்லாமல் போனதால் இடது காலில் 5 விரல்கள் மற்றும் வலது கையில் 3 விரல்களை துண்டிக்கும் நிலை ஏற்பட்டது.
அவற்றை அகற்றாவிடில் நீதுவின் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்பதால், அவரது கையில் 3 விரல்களும், காலில் 5 விரல்களும் வெட்டி அகற்றப்பட்டன. கொழுப்பு அகற்றும் அறுவை சிகிச்சை தவறாக செய்ததன் காரணமாகவே தனது மனைவி 9 விரல்களை இழந்துவிட்டதாக நீதுவின் கணவர் பத்மஜித் குற்றம்சாட்டினார்.
மேலும் அதுகுறித்து நீதுவுக்கு கொழுப்பு அகற்றும் அறுவை சிகிச்சை செய்த தனியார் அழகுசாதன வைத்தியசாலையில் மீது பொலிஸில் புகார் செய்தார். அதன்பேரில் விசாரணை நடத்திய பொலிஸார் அந்த வைத்தியசாலையின் உரிமையாளரான மருத்துவர் பிபிலாஷ் மீது வழக்கு பதிந்தனர். மேலும் அவரது வைத்தியசாலை உடனடியாக மூடப்பட்டது.
கொழுப்பு அகற்றும் அறுவை சிகிச்சை செய்து கொண்ட இளம்பெண் 9 விரல்களை இழந்த சம்பவம் திருவனந்தபரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.