நாட்டின் பல பகுதிகளில் ஏற்படவுள்ள கடல் கொந்தளிப்பு குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
இதற்கமைய, சிலாபம் முதல் புத்தளம் மற்றும் மன்னார் வழியாக காங்கேசன்துறை வரையிலும், மாத்தறை முதல் ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலும் உள்ள கடற்கரையோரக் கடல் பகுதிகளுக்கு மறு அறிவித்தல் வரும் வரை செல்ல வேண்டாம் என்று கடல்சார் மற்றும் மீனவ சமூகங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
நேற்று (25) பிற்பகல் ஒரு விசேட அறிக்கையை வெளியிட்டு வளிமண்டலவியல் திணைக்களம் இதனை அறிவித்துள்ளது.
இதேவேளை குறித்த பகுதிகளில் கடல் சில நேரங்களில் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும் என்று அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.
மன்னாரிலிருந்து புத்தளம், கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலான கடற்கரை பிராந்தியங்களில் உள்ள கடல் பகுதிகளில் சுமார் 2.5 - 3.0 மீற்றர் வரை கடல் அலைகள் உயரக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, மன்னார் முதல் புத்தளம் வரை, கொழும்பு வழியாக காலி வரையிலான கடலோரப் பகுதிகளில் கடல் அலைகள் கரையை கடந்து நிலத்தை அடையும் வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிலாபத்திலிருந்து கொழும்பு வழியாக மாத்தறைக்கும் காங்கேசன்துறையிலிருந்து முல்லைத்தீவு வழியாக திருகோணமலை வரையான கடற் பிராந்தியங்களில் காற்றின் வேகம் அவ்வப்போது மணிக்கு 50-55 கிலோமீற்றர் வரை அதிகரிக்கலாம் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
தென்மேற்கு பருவமழையின் தாக்கம் காரணமாக, கடல் பகுதிகளில் காற்றின் வேகம் இடைக்கிடையே மணிக்கு 60-70 கிலோமீற்றர் வேகம் வரை அதிகரிக்கக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.