கொழும்பிலுள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி கற்ற 16 வயதுடைய மாணவி ஒருவர் கடந்த ஏப்ரல் மாதம் 29 ஆம் திகதி கொட்டாஞ்சேனை, கல்பொத்த வீதியில் உள்ள தொடர்மாடி குடியிருப்பின் மேல் மாடியிலிருந்து கீழே குதித்து உயிரை மாய்த்துக்கொண்டார்.
இந்த சம்பவம் தொடர்பில் பல்வேறு பிரதேசங்களில் பொதுமக்களால் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதையடுத்து குற்றம்சாட்டப்பட்ட கொழும்பு பம்பலப்பிட்டி பிரதேசத்தில் உள்ள பிரபல பாடசாலையின் ஆசிரியர் உடனடியாக பணி இடமாற்றம் செய்யப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்திருந்தது.இது தொடர்பில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் தெரியவருவதாவது,
உயிரிழந்த மாணவி கடந்த ஆண்டு கொழும்பு பம்பலப்பிட்டி பிரதேசத்தில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் போது அதே பாடசாலையில் கடமையாற்றும் ஆசிரியர் ஒருவரால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 08 ஆம் திகதி பம்பலப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று கிடைத்தது.
இதனையடுத்து பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபரான ஆசிரியர் கடந்த ஜனவரி மாதம் 08 ஆம் திகதி கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்ட ஆசிரியர் கொழும்பு புதுக்கடை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து ஜனவரி மாதம் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டு பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது சந்தேக நபரான ஆசிரியருக்கு வெளிநாட்டு பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் மே 19 ஆம் திகதி மீண்டும் நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனையடுத்து இந்த மாணவி மன விரக்தியில் உயிரை மாய்த்துக்கொண்டுள்ள நிலையில், தனியார் வகுப்பு ஆசிரியர் ஒருவர் இந்த மாணவியை சக மாணவர்கள் முன்னிலையில் அவமானப்படுத்தியுள்ளதாக பொலிஸ் பெண்கள் மற்றும் சிறுவர் பாதுகாப்பு பணியகத்திற்கு கடந்த 06 ஆம் திகதி முறைப்பாடு ஒன்று கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.