யாழில் நேற்றைய தினம் இடம்பெற்ற உந்துருளி விபத்தில் இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளதுடன் அவருடன் சென்ற மற்றொரு இளைஞன் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஆவரங்கால் மேற்கு, புத்தூர் பகுதியைச் சேர்ந்த பரிஷ்ணன் அஜய் (வயது 20) என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், நேற்றிரவு புத்தூர் கலைமதி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற கரப்பந்தாட்டத்தை பார்த்துவிட்டு குறித்த இரண்டு இளைஞர்களும் உந்துருளியில் வந்துகொண்டிருந்தனர்.
இதன்போது பருத்தித்துறை வீதி, புத்தூர் சந்திக்கு அருகாமையில் இருந்த மின்கம்பத்துடன் உந்துருளி மோதி இந்த விபத்து சம்பவித்துள்ளது.
இதன்போது இருவரையும் அச்சுவேலி வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை குறித்த இளைஞன் அங்கேயே உயிரிழந்தார். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.
மற்றைய இளைஞர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
