தெலங்கானா மாநிலம், ஹைதராபாத் சனத்நகர் செக் காலனியில், 33 வயதான மனநல மருத்துவர் டாக்டர் ஏ. ரஜிதா, தனது கணவர் ரோகித் மற்றும் அவரது குடும்பத்தினரின் தொடர் துன்புறுத்தலால் மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரஜிதா, பஞ்சாரா ஹில்ஸில் உள்ள மனநல மருத்துவமனையில் பயிற்சி மாணவியாக இருந்தபோது, மனநல சிகிச்சை பெற்று வந்த சாப்ட்வேர் இன்ஜினியர் ரோகித்தை சந்தித்தார்.
அவரது சிகிச்சையால் ரோகித்தின் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, இருவரும் காதலித்து, பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.
ஆனால், முதலிரவுக்கு பின் கணவர் ரோஹித்தின் நடவடிக்கைகளில் மாற்றத்தை பார்த்தார் ரஜிதா. ஒரு கட்டத்தில், ரோகித் தனது வேலையை விட்டு, ரஜிதாவின் வருமானத்தை ஆடம்பர செலவுகளுக்கு பயன்படுத்தினார். புகழ்பெற்ற பன்னாட்டு பள்ளியில் குழந்தைகள் மனநல மருத்துவராக பணியாற்றிய ரஜிதாவிடம், பணம் கேட்டு தொடர்ந்து தொல்லை செய்ததோடு, மறுத்தால் உடல் ரீதியாக தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ரோகித்தின் பெற்றோர் கிஷ்டையா, சுரேகா மற்றும் சகோதரர் மோகித் ஆகியோரும் ரஜிதாவை துன்புறுத்தியதாக அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டினர். இந்த தொடர் துன்புறுத்தலால் மனமுடைந்த ரஜிதா, ஜூலை 16, 2025 அன்று தூக்க மாத்திரைகளை அதிகமாக உட்கொண்டு முதல் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பிய அவர், பெற்றோர் வீட்டில் தங்கியிருந்தபோது, ஜூலை 28 அன்று நான்காவது மாடியில் உள்ள குளியலறை ஜன்னல் வழியாக குதித்து மீண்டும் தற்கொலைக்கு முயன்றார்.
இதில் பலத்த தலை காயமடைந்த அவர், மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்ததாக அறிவிக்கப்பட்டு, ஆகஸ்ட் 5, 2025 அன்று உயிரிழந்தார். ரஜிதாவின் தந்தை, சப் இன்ஸ்பெக்டர் நரசிம்மா கவுட், சஞ்சீவ ரெட்டி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து, ரோகித் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 306 (தற்கொலைக்கு தூண்டுதல்) பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது காவல்துறை, இந்த துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் குறித்து ஆழமான விசாரணை மேற்கொண்டு வருகிறது.
மனநல மருத்துவரான ரஜிதாவின் இந்த துயர முடிவு, மனநலம், குடும்ப வன்முறை மற்றும் சமூக அவநம்பிக்கை குறித்த விவாதங்களை மீண்டும் எழுப்பியுள்ளது.