கடந்த 7ஆம் திகதி முத்துஐயன்கட்டு குளத்தின் இடதுகரையில் அமைந்துள்ள இலங்கை இராணுவத்தின் 12வது சிங்க ரெஜிமென்ட் முகாமில் திருட்டில் ஈடுபட சென்றவர்களை, இராணுவத்தினர் பிடித்து தாக்கியபோது, அங்கிருந்து தப்பியோடிய நால்வர் வீடு திரும்பினர். ஒருவர் காணாமல் போயிருந்தார்.
பின்னர் 9ஆம் திகதி முத்துஐயன்கட்டு குளத்தில் சடலமாக மிதந்த நிலையில் மீட்கப்பட்டார்.
எதிர்மன்னசிங்கம் கபில்ராஜ் (வயது 32) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் (10) அவரது சடலம், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்குட்படுத்தப்பட்டது. நேற்று சடலம் பிரேத பரிசோதனைக்குட்படுத்தப்பட்ட போது, உயிரிழந்தவரின் உறவினர்கள் சிலர் வைத்தியசாலை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய போது, இராணுவத்தினர் கபில்ராஜை அடித்துக் கொன்றதாகவும், சடலத்தில் தாக்குதல் காயங்கள் காணப்படுவதாகவும் கூறியிருந்தனர்.
எனினும், அது தவறான கூற்று என்பதை பொலிசார் உறுதி செய்தனர். பிரேதபரிசோதனையில் அவ்வாறான காயங்கள் எதுவும் அடையாளம் காணப்படவில்லையென்றும், உயிரிழந்தவரின் சகோதரி, சகோதரன், தந்தை அழைக்கப்பட்டு சடலம் காண்பிக்கப்பட்டு. அவ்வாறான காயங்கள் இல்லையென்பது உறுதிப்படுத்தப்பட்டதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. உடலில் எலும்பு முறிவு, நொறுங்கல் காயங்கள் இல்லையென்பது சி.ரி ஸ்கான் முடிவுகள் காண்பிக்கப்பட்டு விளக்கப்பட்டதாகவும், அதையும் மீறி, சடலத்தில் காயங்கள் காணப்பட்டதாக அவர்கள் கூறுவது குறித்து தம்மால் என்ன செய்ய முடியுமென கேட்டனர்.
சடலம் நீண்டநேரம் தண்ணீரில் இருந்தால் கண், மூக்கினால் இரத்தம் வருமென்றும், கபில்ராஜின் சடலத்திலும் அதுதான் நடந்ததாகவும் தெரிவித்தனர்.
கபில்ராஜின் மரணம் குறித்து வெளிப்படையான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தற்போது தமிழ் அரசியல்வாதிகள் கூறுவதை போல, இளைஞன் இராணுவத்தினரால் அடித்துக் கொல்லப்படவில்லை, மரணத்தை ஏற்படுத்தும் காயங்கள் உடலில் காணப்படவில்லையென்பதை பிரேத பரிசோதனை அறிக்கை உறுதிசெய்கிறது. அவர் இராணுவத்தால் தாக்கப்பட்டார், குளத்துக்குள் தப்பியோடினார், பின்னர் சடலமாக மீட்கப்பட்டார்.
அத்துடன், கபில்ராஜ் ஐஸ் போதைப்பொருளை பயன்படுத்தியிருந்ததும் பிரேத பரிசோதனையில் உறுதியாகியுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்தனர்.
