இலங்கையின் இலவச சுகாதார சேவையின் மனித வளம் மற்றும் வினைத்திறனை அதிகரிக்கும் நோக்கில், அறிவியல் துறை சார்ந்த பட்டப்படிப்பை நிறைவு செய்த 515 தாதியர்களுக்கு, தாதிய தரம்-IIIக்கான நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தாதியர் தர நிலை மற்றும் ஒருங்கிணைப்பு பயிற்சியை நிறைவு செய்துள்ள இந்த 515 பட்டதாரிகளுக்கும், நாளை (29) காலை 10 மணிக்கு கொழும்பு 7இல் அமைந்துள்ள அறக்கட்டளை நிறுவன வளாகத்தில் உத்தியோகபூர்வமாக நியமனக் கடிதங்கள் வழங்கப்படவுள்ளன.
சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் இந்த நிகழ்வு நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நியமனம் பெறவுள்ள இவர்கள் மத்திய அரசின் மேற்பார்வையின் கீழ் இயங்கும் பிரதான வைத்தியசாலைகள் மற்றும் போதனா வைத்தியசாலைகளுக்கு நியமிக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அறிவியல் பிரிவில் மூன்றாம் நிலை பதவிகளுக்கான தாதியர் பட்டதாரிகளின் இறுதியான ஆட்சேர்ப்பு கடந்த 2021ஆம் ஆண்டில் நடைபெற்ற நிலையில் சுமார் ஐந்து ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு இந்த ஆட்சேர்ப்பு நடைபெறுவது ஒரு விசேட அம்சமாகும்.
நாட்டின் சுகாதார சேவையின் தற்போதைய தரவுகளின்படி, நாடு முழுவதும் உள்ள அரச சுகாதாரத்துறையில் 43,553 தாதியர் அதிகாரிகள் பணியாற்றி வருகின்றனர்.
.jpeg)