பாடசாலைகளுக்கான பாடப்புத்தகங்களை அச்சிடும் பணிகள் நிறுத்தப்படவில்லை எனவும், அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்ட கல்வி சீர்திருத்தங்களின் கீழ் சில தரங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. 2 முதல் 5 மற்றும் 7 முதல் 11ஆம் வகுப்புகளுக்கான பாடப்புத்தகங்கள் ஜனவரியில் நடைமுறைக்கு வரும் கல்வி சீர்திருத்தங்களின் கீழ் வராததால், அவை வழங்கப்படும் என்று கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவேவ தெரிவித்துள்ளார்.
இருப்பினும், கல்வி சீர்திருத்தங்களின்படி, 1 மற்றும் 6ஆம் வகுப்புகளுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கப்படாது என்றும், அதற்கு பதிலாக, அவை எளிமைப்படுத்தப்பட்ட வகையில் வழங்கப்படும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
ஆசிரியர் கையேடுகளை அச்சிடும் பணிகளும் நிறுத்தப்படவில்லை எனவும், புதிய கல்வி சீர்திருத்தங்களின் தேவைகளுக்கு ஏற்ப, அவை அச்சிடப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
2 முதல் 5 மற்றும் 7 முதல் 11ஆம் வகுப்புகளுக்கான பாடப்புத்தகங்களையும் 1 மற்றும் 6ஆம் வகுப்புகளுக்கான தொகுதிப் பொருட்களை அச்சிடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், 2025 நவம்பர் 15ஆம் திகதிக்குள் பணிகள் நிறைவடையவுள்ளதாகவும் கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவேவ தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளுக்கு, அவற்றை விநியோகிக்கும் பணிகளை டிசம்பர் 31ஆம் திகதிக்கு முன்னர் நிறைவுசெய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
