பப்புவா நியூ கினியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவான இந்த நிலநடுக்கம், நிலப்பரப்பிலிருந்து சுமார் 10 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்டதாக ஜேர்மன் புவியியல் ஆய்வு மையம் (GFZ) தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம், சாலமன் கடலில் ஏற்பட்டுள்ள நிலையில், அதன் மையம் கிம்பே (Kimbe) நகரத்திற்கு தென்கிழக்கே சுமார் 194 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. நிலநடுக்கத்திற்குப் பிறகு, அமெரிக்க சுனாமி எச்சரிக்கை அமைப்பு (PTWC) ஆரம்பத்தில் சுனாமி அச்சுறுத்தல் எச்சரிக்கையை வெளியிட்டு, “சில கடற்கரைகளில் ஆபத்தான சுனாமி அலைகள் எதிர்பார்க்கப்படுகின்றன” என்று கூறியது. இருப்பினும், அது பின்னர் இரத்து செய்யப்பட்டது. பப்புவா நியூ கினியா, பசிபிக் ரிங் ஆப் பயர் (Pacific Ring of Fire) பகுதியில் அமைந்துள்ளதால், அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படுவது பொதுவானது. இந்த நிலநடுக்கம் காரணமாக உயிரிழப்புகள் அல்லது பெரும் சேதங்கள் குறித்து இதுவரை தகவல்கள் ஏதும் பதிவாகவில்லை.
