தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே துரைசாமிபுரத்தில் 2 பஸ்கள் மோதி ஏற்பட்ட விபத்தில் பயணிகள் 8 பேர் உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். சம்பவ இடத்தில் மீட்பு பணிகள் முழுவீச்சில் நடக்கின்றன.
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே இடைகால் துரைசாமிபுரத்தில் இன்று (நவ.,24) காலை 11 மணியளவில் கே.எஸ்.ஆர் என்ற தனியார் பஸ் வந்து கொண்டிருந்தது. அப்போது கோவில்பட்டியில் இருந்து தென்காசி நோக்கி எம்.ஆர்.கோபாலன் என்ற பஸ் வந்தது. இரண்டு பஸ்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.
இந்த சம்பவத்தில் பயணிகள் 8 பேர் பலியாகியுள்ளனர். 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். போலீசார், பொதுமக்கள் உதவியுடன் மீட்பு பணிகள் நடக்கின்றன. சம்பவ இடத்தில் கலெக்டர் கமல் கிஷோர் மற்றும் உயர் அதிகாரிகள் முகாமிட்டு பணிகளை செய்து வருகின்றனர். காயம் அடைந்தவர்கள் தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். பலர் படுகாயம் அடைந்த நிலையில் இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
