இன்று முதல் 23,24,25 ஆம் திகதிகளில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகும் அதேவேளை காற்றின் வேகம் உயர்வாக இருக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவி பணிப்பாளர் கே.திலீபன் கூறுகையில், "தற்போது வளிமண்டல திணைக்களத்தினால் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களுக்கு அமைய இன்று தென் கிழக்கு வங்காள விரிகுடாவில் காற்றழுத்த தாழமுக்கம் ஒன்று உருவாவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக கூறப்படுகிறது.
குறித்த காற்றழுத்த தாழமுக்கம் தொடர்ந்து 23,24,25ஆம் திகதிகளில் வங்காள விரிகுடாவின் மத்திய பகுதியை சென்றடையும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
அந்த காலப்பகுதியில் காற்று சுழற்சியாக மாற்றமடையும் என்றும் கூறப்படுகிறது.
இந்த காலப்பகுதியில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகும் என்றும், அவ்வேளையில் காற்றின் வேகம் உயர்வாக காணப்படும் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
இக்காலப்பகுதியில் அனர்த்தங்களில் இருந்து தம்மை பாதுகாத்துக் கொள்ள மக்கள் விழிப்புடன், அவதானத்துடனும் இருக்குமாறும் வளிமண்டல திணைக்களம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் அறிவுறுத்தல்களை பின்பற்றி பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
காற்றின் வேகம் அதிகரித்தால் கடல் கொந்தளிப்பாக காணப்படும். எனவே கடற்தொழிலில் ஈடுபடுகின்ற கடற்தொழிலாளர்கள், அனர்த்த நிலையை கருத்தில் கொண்டு கடற்தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும்.
காற்றழுத்த தாழமுக்கம் மற்றும் வெள்ளத்தினால் ஏற்படுகின்ற பாதிப்புகள் குறித்து மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்துடன் தொடர்பு கொள்ளவும்.
தொலைபேசி இலக்கங்கள்- 023-2117117 மற்றும் 023-2250133 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் அனர்த்த முகாமைத்துவ மாவட்ட உதவி பணிப்பாளர் தொலைபேசி இலக்கம் 077-2320529 என்ற தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு அனர்த்தம் தொடர்பான தகவல்களை வழங்க முடியும்” என குறிப்பிட்டுள்ளார்.
