வடக்கு மார்க்கத்திற்கான தொடருந்து சேவைகள் அடுத்த வருடம் ஜனவரி 1முதல் ஆரம்பிக்கப்படும் என போக்குவரத்து பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன (Prasanna Gunasena) அறிவித்துள்ளார்.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் சீரற்ற வானிலை காரணமாகப் பாதிக்கப்பட்டிருந்த தொடருந்து சேவைகளை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பான கால அட்டவணையை பிரதி அமைச்சர் நாடாளுமன்றத்தில் தெரிவித்த போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவரது அறிவிப்பின்படி, “டிசம்பர் 20 முதல் பதுளை - அம்பேபுஸ்ஸ இடையிலான மலையக தொடருந்து சேவை மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதுடன் ஜனவரி 1 முதல் தொடருந்து சேவைகள் வடக்கு மார்க்கமாக காங்கேசன்துறை வரை நீடிக்கப்படும்.
புத்தளம் தொடருந்து மார்க்கத்தின் சேவைகள் சிலாபம் வரை விரிவுபடுத்தப்படும். மட்டக்களப்பு தொடருந்து மார்க்கம் முழுமையாகத் திறக்கப்பட்டு தொடருந்து சேவைகள் வழமைக்குத் திரும்பும்.

பெப்ரவரி 1 முதல் மன்னார் மற்றும் தலைமன்னார் நோக்கிய தொடருந்து சேவைகள் முழுமையாக இயங்கும்“ எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அண்மைய அனர்த்தங்களால் தொடருந்து பாதைகளில் ஏற்பட்ட பாதிப்புகளைச் சீரமைக்கும் பணிகள் போர்க்கால அடிப்படையில் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்த பின்னரே இந்தச் சேவைகள் ஆரம்பிக்கப்படும் என்றும் பிரதி அமைச்சர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.