ஹம்பாந்தோட்டை பல்லேமளல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 20 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காலி மற்றும் தெஹியத்தக்கண்டிய இடையே பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்தும், திஸ்ஸமஹாராம மற்றும் மாத்தறை இடையே பயணித்த தனியார் பேருந்தும் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இன்று (18) இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்து இடம்பெற்ற போது காலி மற்றும் தெஹியத்தக்கண்டிய இடையே பயணித்த பேருந்தில் சுமார் 57 பயணிகள் இருந்ததாக ஹம்பாந்தோட்டை பொலிஸார் தெரிவித்தனர். பேருந்தில் இருந்தவர்களில் சுமார் 20 பேர் இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களில் வெளிநாட்டினர் சிலரும் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது. திஸ்ஸமஹாராம மற்றும் மாத்தறை இடையே பயணித்த பேருந்தில் இருந்த எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என பொலிஸார் மேலும் தெரிவித்தனர். திஸ்ஸமஹாராம மற்றும் மாத்தறை இடையே பயணித்த பேருந்தின் பின்பகுதியில் காலி மற்றும் தெஹியத்தக்கண்டிய இடையே பயணித்த பேருந்து மோதியதையடுத்து, சாரதியின் கட்டுப்பாட்டை மீறிச் சென்ற பேருந்து, அருகிலிருந்த வர்த்தக நிலையமொன்றின் மதிலை உடைத்துக்கொண்டு, மற்றுமொரு சிறிய வர்த்தக நிலையத்தையும் சேதப்படுத்தியவாறு முன்னோக்கிச் சென்றுள்ளது. இந்த விபத்தினால் இரு பேருந்துகளுக்கும் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
