யாழ்ப்பாணம் மயிலிட்டி பகுதியில் துவிச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருந்த முதியவர் ஒருவர், இராணுவ வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் மயிலிட்டி பகுதியைச் சேர்ந்த நவரட்ணம் (வயது விபரம் இன்னும் வெளியாகவில்லை) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இன்று அவர் தனது துவிச்சக்கர வண்டியில் வீதியால் சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வந்த இராணுவ வாகனம் மோதியதாகக் கூறப்படுகிறது. விபத்தின் தீவிரத்தால் அவர் அதே இடத்திலேயே உயிரிழந்தார்.
சடலம் பிரேத பரிசோதனைக்காக தெல்லிப்பழை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
விபத்து தொடர்பாக இராணுவ காவல்துறையினா் மற்றும் பலாலி காவல்துறையினா் இணைந்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இராணுவ வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாகத் முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து மயிலிட்டி பகுதியில் பெரும் சோகமும் பதற்றமும் நிலவுகிறது.
இராணுவ வாகனங்கள் குடியிருப்புப் பகுதிகளில் வேகமாகச் செல்வதைக் கட்டுப்படுத்த வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


