அப்பாவின் இறுதிச் சடங்கை செய்வதற்கு தான் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. அம்மாவின் இறுதிச் சடங்கை செய்வதற்காகவாவது சந்தர்ப்பம் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பில் இரண்டு பெண் பிள்ளைகள் எதிர்பார்த்து காத்து நிற்கும் துயர சம்பவம் திருகோணமலையில் பதிவாகியுள்ளது. திருகோணமலை மாவட்டத்தின் வெருகல் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள வட்டவன் கிராமத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயான 43 வயதுடைய சிவக்கொழுந்து மீனா என்ற பெண் குவைட் நாட்டில் மாரடைப்புக் காரணமாக இம்மாதம் 04 ஆம் திகதி உயிரிழந்தார். குடும்ப கஷ்டம் காரணமாக இவர் தொழில் நிமிர்த்தம் 2023 ஆம் ஆண்டு குவைட் நாட்டுக்கு பணிப்பெண்ணாக சென்று வேலை செய்த நிலையயில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். இரண்டு பெண் பிள்ளைகளின் தாயான இவரது கணவர் காணாமல் ஆக்கப்பட்டவர் என தெரியவருகின்றது. பிள்ளைகளை வளர்த்து நல்ல நிலைக்கு கொண்டுவர வேண்டுமென்ற நோக்கத்தோடு சென்ற இவருக்கே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. குவைட்டிலிருந்து சடலத்தை இலங்கைக்கு கொண்டு வருவதென்றால் பெரும் தொகை பணம் செலவாகும். அம்மா, அப்பா இருவருமே இல்லாத இந்த பிள்ளைகளுக்கு சடலத்தை இலங்கைக்கு கொண்டு வந்து இறுதிச் சடங்கு செய்ய முடியாத நிலை காணப்படுகிறது. அரசியல்வாதிகள் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனம் செலுத்தி இந்த தாயின் சடலத்தை இலங்கைக்கு கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இதேவேளை அப்பாவின் இறுதிச் சடங்கை செய்வதற்கு தான் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. அம்மாவின் இறுதிச் சடங்கை செய்வதற்காகவாவது சந்தர்ப்பம் கிடைக்குமா என்கின்ற எதிர்பார்ப்பில் இரண்டு பெண் பிள்ளைகளும் எதிர்பார்த்து காத்து நிற்கின்றனர்.
