வவுனியா மகாறம்பைக்குளம் பகுதியில் நல்லடக்கம் செய்யப்பட்ட சடலத்தை மீள அகழ்ந்து எடுத்து , சடலத்தின் தலையை இனம் தெரியாத கும்பல் ஒன்று அகற்றி சென்றதுடன் , தலையில்லா முண்டத்தை வெளியில் வீசி சென்றுள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
வவுனியா மகாறம்பைக்குளம் பகுதியில் மூன்று மாதங்களிற்கு முன்னர் இளம் குடும்பஸ்தர் ஒருவர் அகாலமரணமடைந்திருந்தார். இந்நிலையில் அவரது சடலம் மரண விசாரணைகளின் பின்னர் கருப்பணிச்சான் குளம் மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.இந்நிலையில் அண்மையில் உயிரிழந்த ஒருவரின் இறுதிச்சடங்கு குறித்த மயானத்தில் இடம்பெற்ற போது அந்தபகுதியில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது.
இதனையடுத்து இறுதி சடங்கில் கலந்து கொண்டவர்கள் அப்பகுதிக்கு சென்ற பார்வையிட்ட போது, அங்கு நல்லடக்கம் செய்யப்பட்ட சடலத்தை மீள அகழ்ந்து எடுத்த இனம் தெரியாத கும்பல் அதன் தலையை அகற்றி எடுத்து சென்றதுடன் , தலையில்லா முண்டத்தை வீசப்பட்டு இருந்ததை அவதானித்துள்ளனர்.இது தொடர்பில் உயிரிழந்த இளைஞனின் பெற்றோர்களுக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து, பெற்றோர்கள் , அது தொடர்பில் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
பில்லி சூனியம் செய்பவர்கள் , புதையல் தோண்டுபவர்கள் அகாலமரணமடைந்த இளையோரின் தலைகளை வைத்து தமக்கான பூஜைகளை செய்கிற பழக்கம் இருப்பதனால் , அவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள் இந்த செயலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
மேலும் சம்பவம் தொடர்பாக வவுனியா குற்றப்பிரிவு பொலிசார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
