உள்நாட்டு தொழிற்துறையினரை வலுப்படுத்துவதே அரசாங்கத்தின் முதன்மை நோக்கம் என்றும், அரசாங்கத்திற்குத் தேவையான விநியோகங்களை மேற்கொள்வதில் எதிர்காலத்தில் உள்நாட்டு வர்த்தகர்களுக்கு வழங்கப்படும் வாய்ப்புகளை விரிவுபடுத்த எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். இலங்கை ஐக்கிய வியாபாரக் கூட்டமைப்புடன் இன்று (08) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார். மத்திய கிழக்கு போர்ச் சூழல் காரணமாக உள்நாட்டுத் தொழில்துறை எதிர்நோக்கியுள்ள சவால்கள் மற்றும் தொழில்துறையினர் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தும், அவற்றுக்கு வழங்கக்கூடிய சாதகமான தீர்வுகள் குறித்தும் இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டன. தரம் குறைந்த பொருட்கள் உள்நாட்டுச் சந்தைக்கு வருதல் மற்றும் அது சார்ந்து எழுந்துள்ள சிக்கல்களைத் தீர்ப்பதற்கு, சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் இணைந்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் இதன்போது தொடர்ந்தும் ஆராயப்பட்டது. கொள்கலன்களை விடுவித்தல் மற்றும் அதில் ஏற்படும் தாமதங்களைத் தவிர்ப்பதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டதுடன், அது தொடர்பாக சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடுவதற்கும் தீர்மானிக்கப்பட்டது
