பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் தற்போது உலக அரசியலின் மையப்புள்ளியாக மாறியுள்ளது.
பல தசாப்த கால பகைமை மற்றும் அண்மைக்கால நேரடி மோதல்களுக்குப் பிறகு, அமெரிக்காவும் ஈரானும் முதன்முறையாக உயர்மட்ட அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளன.இரு நாடுகளின் நம்பிக்கையையும் பெற்ற நாடாக பாகிஸ்தான் இந்தப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளது. இஸ்லாமாபாத் நகரம் முழுவதும் பலத்த பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
அமெரிக்கத் தூதுக்குழுவிற்குத் தலைமை தாங்கும் துணை ஜனாதிபதி ஜே.டி.வேன்ஸ், "ஈரான் நேர்மையுடன் பேச்சுவார்த்தைக்கு வந்தால், நாங்களும் கைகொடுக்கத் தயார்" எனத் தெரிவித்துள்ளார்.
ஈரானின் நெருங்கிய நட்பு அமைப்பான ஹிஸ்புல்லா மீது இஸ்ரேல் முன்னெடுக்கும் தாக்குதல்கள் இந்தப் பேச்சுவார்த்தையை ஆரம்பத்திலேயே சீர்குலைக்கக்கூடும்.லெபனான் மீதான தாக்குதல்கள் தொடர்ந்தால் பேச்சுவார்த்தையில் அர்த்தமில்லை" என ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் எச்சரித்துள்ளார்.
எனினும், அடுத்த வாரம் வாஷிங்டனில் இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையே நேரடி பேச்சுவார்த்தை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகின் மிக முக்கியமான எண்ணெய் விநியோகப் பாதையான ஹோர்முஸ் நீரிணையை ஈரான் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.
அங்கு சிக்கியுள்ள கப்பல்களை விடுவிக்க தலா 2 மில்லியன் டொலர் கட்டணம் வசூலிப்பதாகக் கூறப்படும் புகார்களை டொனால்ட் ட்ரம்ப் கடுமையாக விமர்சித்துள்ளார்.
"ஈரான் கப்பல்களிடம் கட்டணம் வசூலிக்கக் கூடாது" என அவர் எச்சரித்துள்ளார். ஈரான் ஒருபோதும் அணு ஆயுதம் வைத்திருக்கக் கூடாது என்பதில் அமெரிக்கா உறுதியாக உள்ளது. இதற்காகவே 'ஒபரேஷன் எபிக் பியூரி' முன்னெடுக்கப்பட்டதாக ட்ரம்ப் கூறுகிறார்.
ஆனால், சிவில் பயன்பாட்டிற்காக யுரேனியம் செறிவூட்டும் உரிமை தமக்கு இருப்பதாக ஈரான் வாதிடுகிறது.
பேச்சுவார்த்தைகள் தொடங்குவதற்கு முன்னதாகவே, ஈரானின் முடக்கப்பட்ட 120 பில்லியன் டொலர் சொத்துக்களை அமெரிக்கா விடுவிக்க வேண்டும் என ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் கலிபாப் வலியுறுத்தியுள்ளார்.
இந்தப் பேச்சுவார்த்தைகள் உடனடியாக ஒரு நிரந்தர தீர்வைத் தராவிட்டாலும், ஒரு பாரிய பிராந்தியப் போரைத் தவிர்ப்பதற்கான வழியாக இது பார்க்கப்படுகிறது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு மத்தியிலும் தனது புவிசார் அரசியல் நிலையை ஈரான் தக்கவைத்துள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் கருதுவதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.

