பணம் பறிக்கும் மோசடி நடவடிக்கை தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) பொது மக்களுக்கு அவசர எச்சரிக்கை வழங்கியுள்ளது.
அதன்படி நாட்டில் பொலிஸ் அதிகாரிகள் போன்று நடித்து பொது மக்களிடம் பணம் பறிக்கும் மோசடிகள் அதிகரித்து வருவதாக கூறப்பட்டுள்ளது.
தொலைபேசி அல்லது இணையம் வாயிலாக சைபர் குற்றவாளிகள் தொடர்பு கொண்டு உங்கள் மீது ஒரு விசாரணை நடைபெற்று வருவதாக கூறி மிரட்டுகின்றனர்.அதிலிருந்து உங்களைக் காப்பாற்ற அல்லது நிவாரணம் வழங்க பணம் தேவை என வலியுறுத்துவதுடன் குற்ற விசாரணை என்ற போர்வையில் மக்களைப் பயமுறுத்தி பணத்தை பறிக்கின்றனர்.
இவ்வாறான சைபர் மோசடிகள் குறித்து பொதுமக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் எனவும், கடந்த ஆண்டில் மாத்திரம் சைபர் குற்றங்கள் தொடர்பாக 10015 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.அவற்றில் 3100 முறைப்பாடுகள் நேரடியாக இவ்வாறான சைபர் மோசடிகளுடன் தொடர்புடையவையாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவரேனும் தொலைபேசி மூலம் பொலிஸார் என அடையாளப்படுத்தி பணம் கோரினால், உடனடியாக உங்கள் பகுதிக்கு அருகிலுள் பொலிஸ் நிலையத்திற்குத் தகவல் வழங்குமாறு கேட்டுக்கொள்வதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
