மட்டக்களப்பில் ஜனாதிபதி வருகையை முன்னிட்டு நகரம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில், நகரின் மையப்பகுதியில் அமைந்திருந்த மூன்று வர்த்தக நிலையங்களில் திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தனியார் பேருந்து தரிப்பு நிலையத்திற்கு முன்பாக அமைந்திருந்த இரண்டு புடவைக் கடைகள் மற்றும் ஒரு இலத்திரனியல் பொருட்கள் விற்பனை நிலையத்தின் பூட்டுகளை உடைத்து திருடர்கள் உட்புகுந்து, பல இலட்சம் ரூபாய் பெறுமதியான பணம் மற்றும் பொருட்களை கொள்ளையடித்துச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் நேற்றுமுன்தினம் புதன்கிழமை (20) அதிகாலை இடம்பெற்றுள்ளதாகவும், ஜனாதிபதி வருகையை முன்னிட்டு முக்கிய வீதிகள் மற்றும் சந்திகளில் பொலிஸார் இரவு பகலாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த நிலையிலும் இந்த திருட்டு நடைபெற்றுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.
மணிக்கூட்டு கோபுரத்திலிருந்து சுமார் 50 மீற்றர் தொலைவில் உள்ள பிரதான தனியார் பேருந்து நிலையத்திற்கு அருகிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
திருடர்கள் கடைகளின் பூட்டுகளை உடைத்து உள்ளே நுழைந்து, மேசை இழுப்பறைகளில் இருந்த பணம் மற்றும் இலத்திரனியல் பொருட்களை அபகரித்துச் சென்றுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
