பட்டதாரி ஆசிரியர்இலங்கை ஆசிரியர் சேவை 2023 (2026)-க்கு பட்டதாரிகளை நியமிப்பதற்கான போட்டித் தேர்வு நேற்று (24) நாடு முழுவதும் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளதாக இலங்கைத் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இலங்கை ஆசிரியர் சேவையில் நிலவும் ஒட்டுமொத்த ஆசிரியர் பற்றாக்குறைக்குத் தீர்வுகாண்பதை நோக்கமாகக் கொண்டு, நீதிமன்ற நடவடிக்கைகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையிலேயே இம்முறை இந்த பரீட்சை நடத்தப்பட்டுள்ளது.
இம்முறை நாடு முழுவதிலும் உள்ள 1,048 பரீட்சை நிலையங்களில் பரீட்சைகள் நடத்தப்பட்டன.
அரச சேவையில் உள்ள 66,991 பட்டதாரிகளும், ஏனைய 96,442 பட்டதாரிகளும் இம்முறை பரீட்சைக்கு விண்ணப்பித்திருந்தனர்.
விசேட தேவையுடைய 323 விண்ணப்பதாரிகள் பரீட்சைக்குத் தோற்றுவதற்கான விசேட வசதிகளையும் தேர்வுகள் திணைக்களம் ஏற்பாடு செய்திருந்தது.
அரசாங்க சேவையில் உள்ள பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் ஆட்சேர்ப்பதற்காக இந்த போட்டிப் பரீட்சையை நடத்த 2023 ஆம் ஆண்டிலேயே திட்டமிடப்பட்டிருந்தது.
எனினும், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 3 அடிப்படை உரிமை மீறல் வழக்குகள் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த ஒரு வழக்கு காரணமாக இப்பரீட்சை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தது.
அனைத்து சட்ட நடைமுறைகளும் பூர்த்தியானதைத் தொடர்ந்து, அரச சேவையில் உள்ள பட்டதாரிகள் மட்டுமன்றி, ஏனைய வெளிவாரி பட்டதாரிகளும் தோற்றக் கூடிய வகையில் இம்முறை பரீட்சை நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
.jpeg)