இலங்கை மற்றும் இத்தாலி இடையிலான சாரதி அனுமதிப்பத்திர ஒப்பந்தம் ஏப்ரல் மாதம் முதல் அமுலுக்கு வந்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் அறிவித்துள்ளார்.
இதற்கமைய, இத்தாலியில் குறைந்தபட்சம் ஆறு ஆண்டுகள் வதிவிடமாகக் கொண்டுள்ள இலங்கை பிரஜைகள், எழுத்துமூல அல்லது செய்முறைப் பரீட்சைகள் ஏதுமின்றி தமது இலங்கையின் சாரதி அனுமதிப்பத்திரங்களை இத்தாலிய சாரதி அனுமதிப்பத்திரமாக மாற்றிக்கொள்ள முடியும்.வெளிவிவகார அமைச்சு மற்றும் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் தொடர்ச்சியான இராஜதந்திர ஈடுபாடுகளைத் தொடர்ந்து இந்த ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளது.அதற்கான அனைத்து தொழில்நுட்பத் தேவைகளும் தற்போது பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. இந்த முயற்சியானது இத்தாலியிலுள்ள இலங்கை சமூகத்தால் பரவலாக வரவேற்கப்பட்டுள்ளது.அத்துடன், அவர்களின் வேலைவாய்ப்புகளை மேம்படுத்தவும், புலம்பெயர் சமூகத்தின் பங்களிப்பை மேலும் வலுப்படுத்தவும் உதவும் என அமைச்சர் விஜித ஹேரத் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
