நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளுக்கு செம்மஞ்சள் (Amber) நிறத்திலான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களத்தினால் இன்று மாலை வெளியிட்டுள்ள அறிக்கையின் ஊடாகவே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாட்டிற்கு வடகிழக்கு திசையில் வங்காள விரிகுடாவின் தென்மேற்கு பகுதியில் நிலைகொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் (Low Pressure Area) தொடர்ந்து அதே இடத்தில் நீடிக்கிறது.
இதன் காரணமாக, நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் தற்போது நிலவி வரும் மழையுடனான காலநிலையும், பலத்த காற்றுடனான சூழ்நிலையும் மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டைச் சூழவுள்ள ஆழம் கூடிய மற்றும் ஆழம் குறைந்த கடற்பரப்புகளிலும், வங்காள விரிகுடாவின் ஆழம் கூடிய பரப்புகளிலும் மிக பலத்த காற்று வீசக்கூடும்.
இதன் காரணமாக இக்கடற்பிரதேசங்கள் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
அடுத்த 168 மணித்தியாலங்களுக்குள் (7 நாட்களுக்குள்) இந்த குறைந்த அழுத்தப் பிரதேசம் சூறாவளியாக (Cyclone) மாறுவதற்கான சாத்தியக்கூறுகள் ‘இல்லை’ என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கடல்சார் ஊழியர்கள், கடற்றொழில் சமூகம் மற்றும் பொதுமக்கள் இக்காலநிலை மாற்றம் குறித்து மிகவும் அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அத்துடன், வளிமண்டலவியல் திணைக்களத்தால் அவ்வப்போது வெளியிடப்படும் எதிர்கால முன்னறிவிப்புகள் மற்றும் உத்தியோகபூர்வ அறிக்கைகளைத் தொடர்ந்து அவதானிக்குமாறு கோரப்பட்டுள்ளனர்."
.jpeg)