நாட்டின் இரு வேறு பகுதிகளில் இடம்பெற்ற வீதி விபத்துகளில் சிக்கி இருவர் உயிரிழந்துள்ளனர்.
குருணாகல் - புத்தளம் வீதியில், குருணாகல் நகருக்கு அருகாமையில் இடம்பெற்ற விபத்தில் 31 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குருணாகல் நோக்கிப் பயணித்த கார் ஒன்று, சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி மின்சாரத் தூண் மற்றும் தொலைபேசித் தூண் என்பவற்றில் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த சாரதி குருணாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் போதே உயிரிழந்திருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, சிலாபம் - குருணாகல் வீதியின் ஹிரிபொகுண பகுதியில் இடம்பெற்ற மற்றுமொரு விபத்தில் பாதசாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சிலாபத்தில் இருந்து வாரியப்பொல நோக்கிப் பயணித்த பயணிகள் பேருந்து ஒன்று, எதிரே வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதியுள்ளது.
இதன்போது பேருந்தைக் கட்டுப்படுத்த முடியாமல் போனதால், மற்றுமொரு மோட்டார் சைக்கிள் மற்றும் லொறியுடன் மோதி, வீதியோரத்தில் நின்றிருந்த பாதசாரி மீதும் மோதியுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த பாதசாரி ஹெட்டிப்பொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் போதே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் கிரிமெட்டியாவ பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், ஹெட்டிப்பொல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
