இலங்கைக்கான நீடிக்கப்பட்ட நிதி வசதியின் கீழ், ஐந்தாவது மற்றும் ஆறாவது மீளாய்வுகளுக்கு சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுச் சபை விரைவில் ஒப்புதல் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் மூலம் இலங்கைக்கு சுமார் 700 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி கிடைப்பதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் தொடர்பாடல் பணிப்பாளர் ஜுலி கோசாக் கடந்த ஏப்ரல் 9 ஆம் திகதி ஊழியர் மட்ட உடன்பாடு எட்டப்பட்டதை உறுதிப்படுத்தினார்.
எனினும், நிறைவேற்றுச் சபையின் ஒப்புதலைப் பெறுவதற்கு முன்னர் இலங்கை சில முக்கிய பணிகளை நிறைவு செய்ய வேண்டியிருந்தது.
மின்சாரம் மற்றும் எரிபொருளுக்கான செலவை ஈடுகட்டும் விலையிடல் முறையை மீண்டும் நிலைநிறுத்துதல்.
விலை அதிகரிப்பால் பாதிக்கப்படக்கூடிய நலிந்த பிரிவினருக்கு உரிய பாதுகாப்பை உறுதி செய்தல்.
கடன் மறுசீரமைப்பு தொடர்பான நிதி உத்தரவாத மீளாய்வை நிறைவு செய்தல் என்பனவே அந்த பணிகளாக இருந்தன.
இந்தநிலையில் இலங்கை அண்மைக்காலத்தில் இரண்டு பாரிய சவால்களை எதிர்கொண்டதாக கோசாக் சுட்டிக்காட்டினார்.
இந்தச் சவால்களுக்கு மத்தியிலும், இலங்கைப் பொருளாதாரமும் மக்களும் "வியக்கத்தக்க மீண்டெழும் திறனை" வெளிப்படுத்தியுள்ளதாக அவர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் தரவுகளின்படி, இலங்கையின் பொருளாதார சீர்திருத்தங்கள் சாதகமான முடிவுகளைத் தரத் தொடங்கியுள்ளன.
2025 ஆம் ஆண்டில் இலங்கையின் பொருளாதாரம் 5 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
முன்னதாக மறை பெறுமானத்தில் இருந்த பணவீக்கம், தற்போது மீண்டும் நேர் நிலைக்கு திரும்பியுள்ளது.
வருமான அதிகரிப்பு காரணமாக 2025 ஆம் ஆண்டின் நிதிச் செயல்பாடு வலுவாக உள்ளது.
மொத்த உள்நாட்டு உற்பத்தியுடனான கடனின் விகிதம் தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருவதுடன், கடன் மறுசீரமைப்புப் பணிகளும் நிறைவடையும் தருவாயில் உள்ளன.
இலங்கைப் பொருளாதாரம் தற்போது சிறப்பாகச் செயல்பட்டு வருவதாகவும், அரசாங்கம் சீர்திருத்தங்களை முன்னெடுப்பதில் உறுதியாக இருப்பதாகவும் தெரிவித்த சர்வதேச நாணய நிதியம், இலங்கையின் நிலையான பொருளாதார எதிர்காலத்திற்காகத் தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்கவுள்ளதாக உறுதியளித்துள்ளது.
.jpeg)