நீதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் இன்று நாடாளுமன்றத்தில் இடம்பெற்றுகொண்டிருந்த வேளை, யாழ். மாவட்ட சுயேச்சைக் குழு நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனுக்கு எதிராக கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட பிடியாணை உத்தரவு தொடர்பில் சபையில் கடும் சர்ச்சை ஏற்பட்டது.
தனக்கு எதிரான நீதிமன்ற உத்தரவு குறித்துச் சிறப்புரிமைப் பிரச்சினை ஒன்றை எழுப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா, தான் இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டிருக்கும் நிலையில், நீதிமன்றத்திற்குச் செல்லவில்லை எனக் கூறி தனக்கு எதிராகப் பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன் தனது சிறப்புரிமையும் மீறப்பட்டுள்ளது என்றார்.
இதனைத் தொடர்ந்து எழுந்த ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா, இந்தப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது குறித்துத் தாங்கள் குறுஞ்செய்திகள் மூலமே அறிந்ததாகக் குறிப்பிட்டார். நாடாளுமன்றத்திற்கு வந்துள்ள ஒருவருக்கு எதிராகப் பிடியாணை பிறப்பிக்கப்படுவது சிறப்புரிமைப் பிரச்சினை என்பதால், சபாநாயகர் இவ்விடயம் தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும் என்றார்.
