கணேமுல்ல சஞ்சீவவின் மரணத்தைத் திட்டமிட்டதாகக் கூறப்படும் முக்கிய சந்தேகநபரான இஷாரா செவ்வந்தியை, முகப் பரிசோதனைக்காக அரசாங்கப் பகுப்பாய்வாளரிடம் அனுப்ப அனுமதிக்குமாறு கொழும்பு குற்றப் பிரிவு நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
குறித்த வழக்கு கொழும்பு மேலதிக நீதவான் லியான் வருஷ விதான முன்னிலையில் நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, சந்தேகநபரை எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
சுமார் ஒன்பது மாதங்களாக கொழும்பு குற்றப் பிரிவினரால் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வந்த சந்தேகநபர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர், காவல்துறையினர் சமர்ப்பித்த விடயங்களைப் பரிசீலித்த நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
நேபாளத்திற்குத் தப்பிச் சென்றிருந்த நிலையில் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் குறித்த சந்தேகநபரிடம், கடந்த 2025ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முதல் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் பெறப்பட்ட தகவல்கள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட அறிக்கையொன்றையும் காவல்துறையினர் நீதிமன்றில் சமர்ப்பித்துள்ளனர்.
மேலும், குறித்த சம்பவம் திட்டமிடப்பட்ட விதம், அதனுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் ஏனைய சந்தேகநபர்களுடன் மேற்கொள்ளப்பட்ட தொடர்புகள் மற்றும் பணப் பரிமாற்றங்கள் தொடர்பான மேலதிக அறிக்கையும் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் திட்டமிடப்பட்ட காலப்பகுதி, பணம் பரிமாறப்பட்ட விதம் மற்றும் ஏனைய சந்தேகநபர்கள் ஆயுதங்களை வழங்கியதாகக் கூறப்படும் விதம் தொடர்பான தகவல்களையும் காவல்துறையினர் நீதிமன்றின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளனர்.
மேலும் விசாரணைகள் தொடர வேண்டியுள்ளதாகத் தெரிவித்த கொழும்பு குற்றப் பிரிவு, சந்தேகநபரின் முகத்தை CCTV காட்சிகளுடன் ஒப்பிடும் நோக்கில் சிறப்பு முகப் பரிசோதனையை மேற்கொள்வதற்காக, அவரை அரசாங்கப் பகுப்பாய்வாளரிடம் அனுப்ப அனுமதிக்குமாறு நீதிமன்றத்திடம் கோரியுள்ளது.
இதற்கமைய, எதிர்வரும் 17ஆம் திகதி சந்தேகநபரை அரசாங்கப் பகுப்பாய்வாளரிடம் முன்னிலைப்படுத்த எதிர்பார்ப்பதாகவும் காவல்துறையினர் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.
