தற்போது நிலவும் எல் நினோ நிலைமை தீவிரமடைந்தால், இலங்கையில் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் அதிக மழைவீழ்ச்சியால் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.
அடுத்த ஆறு மாதங்களுக்கான தரவுகளை அடிப்படையாகக் கொண்ட பகுப்பாய்வின்படி, அந்தக் காலப்பகுதியில் பருவகால சராசரியை விட அதிக மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அஜித் விஜேமான்ன தெரிவித்துள்ளார்.
ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் பொதுவாக வருடாந்த மழைவீழ்ச்சியின் சுமார் 30 சதவீதம் பதிவாகும் எனத் தெரிவித்த அவர், மழைவீழ்ச்சி மேலும் அதிகரித்தால் நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் உயர்ந்து, சில பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நிச்சயமாக வெள்ளப்பெருக்கு ஏற்படும் எனக் கூற முடியாது என்றும், சாத்தியக்கூறுகளைக் கருத்தில்கொண்டு முன்கூட்டியே தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தக் காலப்பகுதியில் நாடு முழுவதும் மழை பரவலாகப் பெய்யக்கூடும் என்பதுடன், சில பகுதிகளில் கனமழையும் பெய்யக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, டிசம்பர், ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் எல் நினோ நிலைமை வானிலையில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் எனவும், இதன் காரணமாக மேலும் சில தீவிர வானிலை நிலைமைகள் ஏற்படக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் அஜித் விஜேமான்ன தெரிவித்துள்ளார்.
இதனால், பொதுமக்களும் தொடர்புடைய அதிகாரிகளும் வானிலை தொடர்பான அறிவுறுத்தல்களை அவதானித்து, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
