பிச்சைக்காரர்களையும் விட்டுவைக்காத 'பஸ் லலித்': வெடி கொளுத்திக் கொண்டாடிய மக்கள்

டுபாயில் வைத்து கைது செய்யப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடைய முக்கிய பாதாள உலகக் குழு உறுப்பினரான லலித் கன்னங்கர என்ற 'பஸ் லலித்' இலங்கைக்கு அழைத்து வரப்பட்டமையை அடுத்து, ஹங்வெல்ல, வத்தரக்க, மீகொட மற்றும் கல்கெதர உள்ளிட்ட பல பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் வெடி கொளுத்தித் தமது பெரு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.

 நீண்டகாலமாக அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருந்த வர்த்தகர்களும், அப்பகுதி பொதுமக்களும் இந்த கைதின் மூலம் பெரும் நிம்மதி அடைந்துள்ளோம் என தெரிவித்துள்ளனர்.

இந்த குற்றவாளியைக் கைது செய்து நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை எடுத்தமைக்காக ஜனாதிபதி, பாதுகாப்பு அமைச்சகம், தெற்கு கொழும்பு குற்றப்பிரிவு, புலனாய்வுப் பிரிவு மற்றும் ஹங்வெல்ல பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உள்ளிட்ட அனைத்துப் பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் ஹங்வெல்ல வர்த்தகர் சங்கம் மற்றும் பிரதேச மக்கள் பதாகைகளை ஏந்தித் தமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துள்ளனர்.

பிச்சைக்காரர்கள் முதல் வர்த்தகர்கள் வரை அனைவரிடமும் ரூபா 100 முதல் லட்சக்கணக்கான ரூபா வரை பஸ் லலித் கட்டாயக் கப்பம் பெற்று வந்தார் என அப்பகுதி மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

அத்துடன், எம்பிலிபிட்டிய பகுதியில் பாலியல் வன்புணர்வு குற்றத்தில் ஈடுபட்டு, ஹங்வெல்ல பகுதியின் அமைதியைச் சூறையாடிவிட்டு வெளிநாட்டிற்குத் தப்பிச் சென்ற இவரை, டுபாயில் வைத்து கைது செய்து இலங்கைக்குக் கொண்டு வந்த அரசாங்கத்திற்கும் பாதுகாப்புத் துறையினருக்கும் கிராம வாசிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

மேலும், பாதாள உலகக் குழுவினருக்கு எதிரான இத்தகைய கடுமையான நடவடிக்கைகள் தொடர வேண்டும் எனவும், சட்டத்தை மதிக்கும் அமைதியான சமூகத்தை உருவாக்குவதற்காக இதுபோன்ற கொடூரமான குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை நடைமுறைப்படுத்துமாறும் மக்கள் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.