காணாமல்போன பதுளை மருத்துவமனை மயக்கவியல் நிபுணரின் உடல் மீட்பு!

 

பதுளை போதனா மருத்துவமனையில் பணியாற்றிய மயக்கவியல் நிபுணர் ஒருவர் காணாமல்போயிருந்த நிலையில், மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போது அவரது சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது என்று மஹியங்கனைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மஹியங்கனை, மாபாகட 17ஆம் கட்டை பகுதியில் வீயானா கால்வாய்க்கு அருகில் கைவிடப்பட்ட நிலையிலிருந்த மோட்டார் வாகனம் தொடர்பில் கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.

நேற்று இரவு முதல் அந்த இடத்தில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் வாகனம், காணாமல்போன மருத்துவருக்குச் சொந்தமானது என அடையாளம் காணப்பட்டதை அடுத்து, பிரதேச மக்களும் பொலிஸாரும் இணைந்து தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்தனர்.

வாகனம் நிறுத்தப்பட்டிருந்த இடத்துக்குப் பக்கத்தில் உள்ள புதர் பகுதியிலிருந்து மருத்துவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சடலத்துக்கு அருகில் சில மருந்து மாத்திரைகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மஹியங்கனைப் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.