சைவ குருமார்கள் குழுவுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு

கடந்த இரண்டு வருடங்களாக நாட்டில் எந்தவொரு இனவாத மோதலுக்கும் இடமளிக்காது, அனைத்து மக்களுக்கும் இடையில் சகவாழ்வு, சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை உறுதிப்படுத்துவதற்காக ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் முன்னெடுத்த வேலைத்திட்டத்திற்கும், நாட்டின் எதிர்கால சந்ததியை வீழ்ச்சிக்கு உட்படுத்தி வரும்  போதைப்பொருள் பேரழிவை ஒழிப்பதற்காக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள வேலைத்திட்டத்திற்கும் இந்து குருமார்கள் தமது ஆசிகளை வழங்கினர்.

கொழும்பு, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம் மற்றும் மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தி வருகை தந்த இந்து குருமார்கள் குழுவினர் இன்று (10) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை சந்தித்த போதே இவ்வாறு தெரிவித்தனர்.

மதம் அல்லது கலாசாரத்தை அடிப்படையாகக் கொண்டு இனவாதத்தைப் பரப்ப முயற்சிகள் மேற்கொள்ளப்படுமாயின் அதற்கு தாம் எதிர்ப்புத் தெரிவிப்பதாகவும், மதத்தினால் முன்னெடுக்கப்பட வேண்டியது அனைவருக்கும் அன்பைப் பகிர்ந்தளிப்பதேயாகும் என்றும் இந்து குருமார்கள் இதன்போது மேலும் சுட்டிக்காட்டினர்.

போதைப்பொருள் பேரழிவுக்கு எதிராக அரசாங்கம் முன்னெடுத்து வரும் வேலைத்திட்டம் குறித்தும் இதன் போது விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன், போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பது என்பது எந்தவொரு தனிநபராலும் அல்லது நிறுவனத்தாலும் மாத்திரம் செய்யக்கூடிய ஒரு விடயமல்ல என்றும், முழு சமூகமும் இணைந்து ஏற்க வேண்டிய தேசியப் பொறுப்பு என்பதைப் புரிந்து கொண்டு, அதனை முழுமையாக ஒழிப்பதற்கு சமூகத்தின் அனைத்துத் தரப்பினரின் தீவிரப் பங்களிப்பும் அவசியம் என்று சுட்டிக் காட்டிய இந்து குருமார்கள், அந்த தேசிய வேலைத்திட்டத்தைத் தொடர்ச்சியாகவும் வலுவாகவும் முன்னோக்கிக் கொண்டு செல்வதற்காக ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்திற்குத் தமது ஆசிகளைத் தெரிவித்தனர்.

குறிப்பாக, இதுபோன்ற தேசியத் தேவைகளின் போது நாட்டின் பல்வேறு பகுதிகளில் பரந்து வாழும் அனைத்து இந்து குருமார்களும் ஒன்றிணைந்து செயற்படக்கூடிய முறையான பொறிமுறை ஒன்றை உருவாக்கிக் தருமாறும் ஜனாதிபதியிடம் கேட்டுக்கொண்டதுடன், இந்து அறநெறிப் பாடசாலைகளை நடத்துவது உள்ளிட்ட இந்து பக்தர்களுக்கு உள்ள பிரச்சினைகளை கலந்துரையாடி அதற்கான தீர்வுகளைப் பெற்றுக்கொள்ள அதன் மூலம் வாய்ப்பு ஏற்படும் என்றும் சுட்டிக் காட்டினர்.

பல்வேறு மதப் பாரம்பரியங்கள், நம்பிக்கைகள் மற்றும் அடையாளங்களைக் கொண்ட இந்து மதத்திற்கு ஒற்றைத் தலைமைத்துவக் கட்டமைப்பு இல்லாததால், அதன் பன்முகத்தன்மையை ஒரே முறையில் ஒருங்கிணைக்க முடியாது என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அந்த மத அடையாளங்களையும் பல்வேறு பாரம்பரியங்களையும் அவ்வாறே பாதுகாத்துக்கொண்டு, பொதுவான சமூக நோக்கங்களுக்காகக் கூட்டாகச் செயற்படக்கூடிய குருமார்களின் ஒருங்கிணைந்த பொறிமுறையொன்றை உருவாக்குவதன் முக்கியத்துவம் குறித்தும் இங்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டது.

அதன்படி, இந்து மதப் பன்முகத்தன்மைக்கு மதிப்பளித்து அனைத்துத் தரப்பினரதும் பங்களிப்புடன் பொதுவான சமூகச் செயற்பாடொன்றை உருவாக்குவதற்கு அவசியமான வேலைத்திட்டத்தை ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளரின் பங்களிப்புடன் தயாரிக்குமாறும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார்.

இராமகிருஷ்ண மிஷனின் கொழும்பு நிலையப் பொறுப்பாளர் ஸ்ரீமத் சுவாமி அக்ஷராத்மானந்தஜி மகராஜ், சின்மயா மிஷனின் கொழும்பு நிலையப் பொறுப்பாளர் சுவாமி குணாதீத்தாநந்த சரஸ்வதி,   பிரம்மசிரி எஸ். சிவநேசன் சர்மா,சத்தியசீலன் உமாகாந்த் சிவாச்சாரியார்  உள்ளிட்ட குருமார்கள், ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகே உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.