டெல்லி: சத்தீஸ்கரில் கடந்த 2015ம் ஆண்டில் 5 வயது மற்றும் 3 வயது நிரம்பிய 2 மகள்களை பெண் ஒருவர் இரும்பு கம்பியால் அடித்து கொன்றார். அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. சிறையில் இருந்த பெண் சார்பில் ஆயுள் தண்டனையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதில் அந்த பெண் மனநல பிரச்சனைக்கு ஆளாகி இருந்ததாகவும், அந்த சமயத்தில் அவர் அடித்தபோது குழந்தை இறந்ததாகவும் கூறப்பட்டு இருந்தது. இதனை விசாரித்த உச்சநீதிமன்றம் அவரது ஆயுள் தண்டனையை ரத்து செய்து அதிரடியாக உத்தரவிட்டது.
சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த அங்கன்வாடியில் பணியாற்றும் பெண்ணுக்கு 5 வயது மற்றும் 3 வயதில் 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இவர் தனது குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார். இவர் கடந்த 2015ம் ஆண்டு ஜூன் மாதம் தனது 2 குழந்தைகளும் இரும்பு கம்பியால் அடித்தார். இதில் அந்த குழந்தைகள் இறந்தனர்.
2 குழந்தைகளையும் அடித்து கொன்ற பெண்ணை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சமயத்தில் அந்த பெண் தரப்பில் மனநல பிரச்சனைகள் இருக்கிறது. இந்த சமயத்தில் குழந்தைகளை அடித்தபோது இறந்துவிட்டதாக தெரிவித்து இருந்தார். ஆனாலும் போலீசார் ஏற்கவில்லை.
இதுபற்றிய வழக்கை விசாரித்த சத்தீஸ்கர் மாவட்ட நீதிமன்றம் அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கியது. இந்த தண்டனையை சத்தீஸ்கர் உயர்நீதிமன்றமும் உறுதி செய்தது. இதனால் அந்த பெண் ஆயுள் தண்டனை கைதியாக சிறையில் அடைக்கப்பட்டார். இந்த ஆயுள் தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று பெண் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கு என்பது உச்சநீதிமன்ற நீதிபதிகள் பிவி நாகரத்னா மற்றும் என் கோடீஸ்வரர் சிங் அமர்வில் விசாரிக்கப்பட்டு வந்தது. தற்போது உச்சநீதிமன்ற நீதிபதிகள் பெண்ணுக்கு வழங்கப்பட்ட ஆயுள் தண்டனையை அதிரடியாக ரத்து செய்துள்ளன. கடந்த 2015 ம் ஆண்டு முதல் தொடர்ந்து 10 ஆண்டுகளாக பெண் சிறையில் இருப்பதை உணர்ந்து ஆயுள் தண்டனை என்பது ரத்து செய்யப்பட்டது.
மேலும் இந்த வழக்கின்போது உச்சநீதிமன்ற நீதிபதி கோடீஸ்வரர் சிங் கூறுகையில், ‛‛குற்றம்சாட்டப்பட்ட பெண் 10 ஆண்டுகளாக சிறையில் இருந்துள்ளார். அவர் கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் மகள்களை தாக்கவில்லை. ஆனால் மனநல பிரச்சனை ஏற்பட்ட சமயத்தில் தாக்கியதால் குழந்தைகள் இறந்துள்ளது. இது கொலையாக கருதப்பட வேண்டியது இல்லை.
மேலும் குற்றம்சாட்டப்பட்ட பெண் அந்த குழந்தைகளின் தாய். மனநல ஆலோசகரிடம் ஆலோசனையும் பெற்றுள்ளார். கிராமப்புறங்களில் மூடநம்பிக்கைகள் அதிகம் இருக்கின்றன. கண்ணுக்கு தெரியாத சக்திகள் ஒருவரை கட்டுப்படுத்த முடியும் என்று நம்புவதால் பலரும் குழப்பம் அடைகின்றனர்.
குடும்பத்தில் கணவன் - மனைவி இடையே எந்த பிரச்சனையும் இல்லாதபோது ஒரு தாய் எப்படி 2 குழந்தைகளையும் கொல்வார்? எப்படி இத்தகைய கொடூர செயலை பெண் ஒருவரால் செய்ய முடியும். உண்மையில் அவருக்கான பாதிப்பும், அவர் மீதான குற்றச்சாட்டும் விவரிக்க முடியாதது. உண்மையில் குற்றம்சாட்டப்பட்ட பெண் கூறியது போல் அவரை தாண்டிய சில சக்திகள் தான் அவரை அத்தகைய செயலில் ஈடுபட வைத்திருக்கும்.
மேலும் ஒருவரின் மனநிலையை தற்காலிகமாக பாதிக்கும் செயலை ஸ்கிசோஃப்ரினியா என்று சொல்கிறோம். இதுபற்றி கிராம மக்கள் யாரும் அறிந்து இருப்பது இல்லை. இதனால் பலரும் அதற்கு சிகிச்சையும் எடுத்து கொள்வது இல்லை. இன்னும் சொல்லப்போனால் இந்த பாதிப்புக்கான அறிகுறியை கண்டறிவது கூட கடினமான ஒன்றாக தான் இருக்கும். இதனால் சரியான சிகிச்சையை நாடுவது இல்லை. எனவே குறிப்பிட்ட நபரின் மனநிலையை யாராலும்புரிந்து கொள்ள முடியாது. அவர் பற்றி தவறான புரிதலை மக்கள் கொண்டிருக்க வாய்ப்புள்ளது. இந்த சம்பவமும் மனக்குழப்பத்தின்போது ஏற்பட்டு இருக்கலாம். தற்போது அவர் 10 ஆண்டு சிறை தண்டனையை அனுபவித்து உள்ளதால் விடுதலை செய்கிறோம்''