தமிழ் சினிமா நடிகர்கள் தொடர்ந்து ஹைதராபாத் உள்ளிட்ட வெளி மாநிலங்களில் படப்பிடிப்புகளை நடத்தி வருவதாக பல பிரச்சனைகள் கிளம்பி வந்த நிலையில், ஜன நாயகன் படத்தை முழுக்க முழுக்க தமிழ்நாட்டிலேயே நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ளாராம் விஜய் என தகவல்கள் வெளியாகி உள்ளன. ஜன நாயகன் ஷூட்டிங் ஆரம்பித்ததில் இருந்தே ஒரு பக்கம் ஷூட்டிங் இன்னொரு பக்கம் அரசியல் என விஜய் பிசியாக இருப்பதால் அதிகபட்சமாக படப்பிடிப்பை சென்னையிலேயே நடத்தி வந்தனர்.
இந்நிலையில், அடுத்தகட்டமாக வெயிலுக்கு இதமான இடத்தில் படப்பிடிப்பை நடத்த படக்குழு திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் சில கசிந்துள்ளன. எச். வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டேவும் முக்கிய கதாபாத்திரத்தில் மமிதா பைஜுவும் நடித்து வருகின்றனர்.
சூர்யாவை வைத்து வெங்கி அட்லூரி இயக்கும் படத்திலும் மமிதா பைஜு நடிக்கப் போவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. முன்னதாக வணங்கான் படத்திலேயே சூர்யாவின் தங்கையாக மமிதா பைஜு கமிட் செய்யப்பட்டு பின்னர், சூர்யா விலகிய நிலையில், அவரும் விலகியது குறிப்பிடத்தக்கது.
பையனூரில் ஜன நாயகன் ஷூட்டிங்: சென்னைக்கு அருகே உள்ள பையனூரில் தான் செட் போட்டு ஜன நாயகன் படப்பிடிப்பை இதுவரை எச். வினோத் பரபரப்பாக இயக்கி வந்தார். விஜய், மமிதா பைஜு, பூஜா ஹெக்டே, பிரகாஷ் ராஜ், பிரியாமணி, பாபி தியோல் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் ஜன நாயகன் திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி 9ம் தேதி பொங்கல் விடுமுறையை குறிவைத்து வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த படத்துக்குப் போட்டியாக சிவகார்த்திகேயனின் பராசக்தி படமும் வெளியாக காத்திருக்கிறது. மேலும், சில பெரிய படங்களும் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என்கின்றனர்.
அடுத்து கொடைக்கானல்: வரும் மே 2ம் தேதி முதல் ஜன நாயகன் படத்தின் அடுத்தக் கட்ட படப்பிடிப்பை கொடைக்கானலில் நடத்த எச். வினோத் திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சம்மர் வெயிலுக்கு இதற்கு மேலும், சென்னையில் படப்பிடிப்பை நடத்த வேண்டாம் என முடிவு செய்துவிட்டாரா விஜய் என்கிற கேள்விகளும் எழுந்துள்ளன. கதைப்படி பிளாஷ்பேக் போர்ஷன்கள் சில கொடைக்கானலில் படமாக்கப்பட வேண்டிய சூழல் உள்ள நிலையில், விஜய் அடுத்ததாக கொடைக்கானலுக்கு படக்குழுவுடன் செல்லவுள்ளார் என்கின்றனர்.
கோடை கூட்டம்: கோடை விடுமுறைக்கு ஒட்டுமொத்த கூட்டமும் கொடைக்கானலுக்குத்தானே படையெடுக்கும் எனும் நிலையில், கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் அதிகம் வராத ஒரு கிராமத்துக்குள் படப்பிடிப்பை நடத்த எச். வினோத் பக்காவாக பிளான் போட்டுள்ளதாக கூறுகின்றனர். கூடிய விரைவில் ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் அவர் நிறைவு செய்துவிடுவார் என்றும் விஜய் தனது அரசியல் பயணத்துக்காக அதிக நேரத்தை ஒதுக்க முடிவு செய்துள்ள நிலையில், ஜன நாயகன் படப்பிடிப்பு பணிகள் இன்னும் சில மாதங்களில் முடிந்துவிடும் என்கின்றனர்.
பூஜா ஹெக்டே ஹேப்பி: விஜய்யுடன் இணைந்து ஜன நாயகன் படத்தில் நடித்து வரும் பூஜா ஹெக்டே மே 1ம் தேதி முதல் நாள் காட்சியை ரசிகர்களுடன் பார்த்து முடித்துவிட்டு அதன் பின்னர் தான் கொடைக்கானலுக்கு புறப்படப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அடுத்தடுத்து தனது படங்கள் வெளியாவது மற்றும் பெரிய படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்து வருவதால் ரொம்பவே பூஜா ஹெக்டே ஹேப்பியாக உள்ளார் என்கின்றனர்.