நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் குழந்தை உட்பட 4 பேர் உயிரிழந்தனர். நாங்குநேரியை அடுத்த தளபதிசமுத்திரம் அருகேயுள்ள நெடுஞ்சாலையில் நேற்று மாலை நாகர்கோவில் நோக்கி கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. திடீரென அந்த கார் கட்டுப்பாட்டை இழந்து, சாலையின் நடுவில் உள்ள தடுப்புச் சுவரில் ஏறி, மறுபுறம் உள்ள சாலைக்கு சென்றது.
அப்போது, இந்த கார், அந்த வழியாக நெல்லை நோக்கி வந்து கொண்டிருந்த மற்றோரு கார் மீது மோதியது. இதில் 2 கார்களும் பலத்த சேதமடைந்தன. கார்களில் இருந்த 4 ஆண்கள், 2 பெண்கள், ஒரு குழந்தை என 7 பேர் பலத்த காயமடைந்தனர். ஏர்வாடி போலீஸார் மற்றும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
இந்த விபத்தில் அந்த இடத்திலேயே ஒரு ஆண், ஒரு பெண் உயிரிழந்தனர். மற்ற 5 பேரும் வள்ளியூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஒரு குழந்தை, ஒரு பெண் உயிரிழந்தனர். மற்ற 3 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்தில் உயிரிழந்தவர்கள் குறித்து ஏர்வாடி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.