பேருந்தொன்றில் இரண்டு இளைஞர்களால் தவறான முறைக்குட்படுத்தப்பட்ட பல பெண்களை காப்பாற்ற முயன்ற நடத்துனர் தாக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் நேற்றையதினம்(07.06.2025) நாவலப்பிட்டியிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற பேருந்தில் நடந்துள்ளது.
சந்தேகநபர்களான இரண்டு இளைஞர்களும் பயணத்தின் இடைநடுவில் பேருந்தில் ஏறியுள்ளனர்.
பேருந்தில் பல இருக்கைகள் வெற்றிடமாக இருந்த போதிலும், அவர்கள் பெண் பயணிகளுக்கு அருகில் அமர்ந்து அவர்களிடம் தவறாக நடந்துக் கொண்டுள்ளனர்.
இதனையடுத்து, அவர்களை காப்பாற்ற முயன்ற குறித்த பேருந்தின் நடத்துனரை கத்தியை காட்டி இளைஞர்கள் தாக்க முயன்றுள்ளனர்.
இதன் பின்னர், பஸ் கிரில்லாவல போக்குவரத்து சமிக்ஞையில் நின்ற போது, வாக்குவாதம் அதிகரித்து மூவரும் வாகனத்தை விட்டு வெளியேறியுள்ளனர்.
இதன்போது, சந்தேக நபர்கள், வீதியோரத்தில் இருந்த ஒரு மரக் கம்பத்தை உடைத்து நடத்துனரைத் தாக்க முயன்று அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர்.
எவ்வாறாயினும், அப்பகுதி மக்களின் உதவியுடன் சந்தேகநபர்கள் இருவரும் பிடிபட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், காயமடைந்த நடத்துனர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.