ஜனாதிபதி அதிரடி அறிவிப்பு..!



பொது போக்குவரத்து சேவையை மேம்படுத்த அரசாங்கம் விசேட கவனம்

தற்போதுள்ள கட்டமைப்பிற்குள் சீர்திருத்தங்களை மேற்கொள்வதை விட, நாட்டை ஒரு புதிய நிலைக்கு உயர்த்துவதே தற்போதைய அரசாங்கத்தின் நோக்கம் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். 

கடந்த அரசியல் கலாசாரத்தை மாற்றம் செய்து தற்போதைய அரசியல் அதிகாரத்தில் இருப்பவர்கல் என்றவகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும், அது நிலையானதாக உருவாக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார். நாட்டின் அனைத்து துறைகளையும் புதிய நிலைக்கு உயர்த்தவும் இதேபோன்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார். 

நாட்டை ஒரு புதிய நிலைக்கு உயர்த்துவதற்காக செயல்படுத்தப்படும் திட்டத்தில் பொது போக்குவரத்து சேவையை வலுப்படுத்துவதில் அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளது என்றும், சிறிய அரசாங்கங்களுக்கும் தனிப்பட்ட அதிகார வர்க்கத்தினர்களுக்கும் தங்கள் விருப்பப்படி போக்குவரத்து சட்டங்களை செயல்படுத்த அனுமதிக்கப்படாது என்றும், வலுவான போக்குவரத்து சட்ட முறையை அறிமுகப்படுத்தி செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி கூறினார். 

அதேசமயம் பொதுச் சொத்துக்கள் திருடப்படுவதைப் பற்றி ஒரு சமூகமாக நாம் அஞ்ச வேண்டும் என்றும், அனைவரும் சட்டத்திற்குக் கீழ்ப்படிய வேண்டும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார். 

ஜனாதிபதி அலுவலகத்தில் (27) பிற்பகல் நடைபெற்ற ‘Dream Destination’ 100 ரயில் நிலையங்களை நவீனமயமாக்கும் திட்டத்தின் தொடக்க விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இவ்வாறு தெரிவித்தார். 

இந்த நிகழ்வில் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி, தினமும் சுமார் எட்டு பேர் வீதி விபத்துகளில் உயிரிழப்பதாக புள்ளிவிவரங்கள் உறுதிப்படுத்துவதாக மேலும் சுட்டிக்காட்டினார். 

வலுவான போக்குவரத்து சட்ட கட்டமைப்பின் ஊடாக,வீதி விபத்துகளைத் தடுக்கவும், போக்குவரத்து நெரிசலைத் தடுக்கவும், நச்சு வாயு வெளியேற்றத்தைக் குறைப்பதன் மூலம் சுற்றுச்சூழல் பாதிப்பைக் குறைக்கவும், வாகன இறக்குமதிக்காக செலவிடும் அரசாங்கத்தின் பாரிய செலவைக் குறைக்கவும் உதவும் என்று ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். 

அதன்படி, நாட்டின் பொதுப் போக்குவரத்து கட்டமைப்பை மேம்பட்ட, வசதியான மற்றும் திறமையான சேவையாக மாற்றும் திட்டம் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளதாகவும், இதற்காக அரசாங்கம் மேற்கொண்ட முதலீடுகளுக்கு மேலதிகமாக, தனியார் துறைக்கு முதலீட்டு வாய்ப்புகளும் திறக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி கூறினார். 

உலக நாடுகளுடன் ஒப்பிடும்போது இன்றைய காலத்திற்கு ஏற்றவாறு நாட்டின் ரயில் நிலையங்களை புதிய தனித்துவத்துடன் முத்திரை பதிக்க அரசாங்கத்துடன் இணையுமாறு தனியார் துறையினருக்கும் ஜனாதிபதி அழைப்பு விடுத்தார். 

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு மற்றும் 'Clean Sri Lanka' திட்டம் ஆகியவை இணைந்து தனியார் துறையின் ஆதரவுடன் 100 ரயில் நிலையங்களை பொது-தனியார் கூட்டுத் திட்டமாக (Public-Private Partnership)நவீனமயமாக்கும் திட்டம் தொடங்கப்பட்டது. 

விசேட தேவைகள் உள்ள சமூகம் உட்பட அனைத்து பயணிகளின் பாதுகாப்பையும் வசதியையும் உறுதி செய்யும் சுத்தமான, அழகான ரயில் நிலைய கட்டமைப்பை நாட்டில் உருவாக்குவதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும். 

வீதிப் பாதுகாப்பு செயல் திட்டத்தை (The Road Safety Action Plane 2025 – 2026) போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் கையளித்தார். 

இந்த நிகழ்வில் கருத்துத்தெரிவித்த, அமைச்சர் பிமல் ரத்நாயக்க வீதி நெரிசலால் மட்டும் ஆண்டுதோறும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2%-3% இழப்பு ஏற்படுகிறது என்று கூறினார். 

2012 ஆம் ஆண்டு முதல், மக்கள் பெருமளவில் பொது போக்குவரத்தை கைவிட்டு வருகின்றனர், அதன்படி, எதிர்காலத்தில் மைதானங்கள் போன்ற அகலமான சாலைகள் கட்டப்பட்டாலும் போக்குவரத்து சிக்கல்கள் முழுமையாக தீர்க்கப்படாது என்பதால், அதற்கு பதிலாக பொது போக்குவரத்தை வலுப்படுத்துவது கட்டாயமாகியுள்ளது என்று கூறினார். 

இதற்காக, எதிர்காலத்தில், தனது அமைச்சு கொட்டாவயிலிருந்து அவிசாவெல்ல வரை இரட்டைப் பாதையையும், அவிசாவெல்லவிலிருந்து இரத்தினபுரி வரை புதிய ரயில் பாதையையும் அமைக்கவும், சரக்கு போக்குவரத்துக்கு ரயில் சேவைகளைப் பயன்படுத்துவதற்கான வசதிகளை மேம்படுத்தவும், ரயில் பாதையின் உரிமையை ரயில்வேயின் கீழ் இருக்கும் வகையில் கைவிடப்பட்ட நுவரெலியா-நானுஓயா ரயில் பாதையை தனியார் துறையுடன் இணைந்து சுற்றுலாத் துறைக்காக மேம்படுத்தவும், எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் பல புதிய ரயில்களைக் கொண்டுவரவும் முன்மொழிய எதிர்பார்ப்பதாக அவர் கூறினார். 

ரயில் நிலையங்களை நவீனமயமாக்குவதற்கான திட்டத்தை எம்.ஐ.சி.டி. அசோசியேட்ஸ் நிறுவனத்தின் இணை ஸ்தாபகர் மற்றும் முக்கிய கட்டிடக் கலைஞர் முரால் இஸ்மாயில் வழங்கினார். மருதானை, மீரிகம மற்றும் மொரட்டுவ ரயில் நிலையங்களில் செயல்படுத்தப்பட்ட முன்னோடித் திட்டங்களின் அனுபவங்களை, NIO அமைப்பின் சார்பாக பட்டய பொறியாளர் எம்.எம்.எஸ். மோரேமட, விளக்கினார். 

மேலும் அவரது அமைப்பு தேவையான இடங்களில் தொழில்நுட்ப வழிகாட்டுதலை தொண்டரடிப்படையில் முன்வந்து வழங்கும் என்று கூறினார். 

இதனுடன் இணைந்ததாக, அதிக எண்ணிக்கையிலான பாதுகாப்பற்ற ரயில் கடவைகள் (429) இருப்பதாகவும், அவற்றில் 134 கடவைகளை முதல் சுற்றில் பாதுகாப்பானதாக மாற்றுவதன் மூலம் விபத்துகளைக் குறைக்க முடியும் என்று இலங்கை ரயில்வே பிரதம பொறியாளர் (சமிக்ஜைகள் மற்றும் தொலைத்தொடர்பு) வீ.சீ.ஈ. ஜெயசேகர சுட்டிக்காட்டினார். 

‘Dream Destination’ திட்டம் குறித்தும் கலந்து கொண்டோரின் கருத்துக்கள் பரிமாறப்பட்டன. 

ஜனாதிபதியின் செயலாளர் கலா நிதி நந்திக சனத் குமநாயக்க, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சின் செயலாளர் சிரேஷ்ட பேராசிரியர் கபில சி.கே. பெரேரா, இலங்கை ரயில்வே பிரதம பொறியாளர் (சமிக்ஜை மற்றும் தொலைத்தொடர்பு) வீ.சீ.ஈ. ஜெயசேகர, மென்பொருள் பொறியாளர் சுமுது ரத்நாயக்க மற்றும் தனியார் துறையில் உள்ள பல முக்கிய நிறுவனங்களின் தலைவர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.

இந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்

கருத்துரையிடுக

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post