குழந்தைகளை கொன்ற தாய்க்கு சாகும் வரை சிறை..!

 சென்னை குன்றத்தூர் பகுதியில் 2018-ம் ஆண்டு நடந்த பரபரப்பான இரட்டை கொலை வழக்கில், தனது இரு குழந்தைகளை கொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட அபிராமி மற்றும் அவரது கள்ளக்காதலன் மீனாட்சி சுந்தரத்துக்கு காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

இந்த வழக்கு தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது, குறிப்பாக ஒரு தாய் தனது குழந்தைகளை கொடூரமாக கொலை செய்த சம்பவம் பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை உருவாக்கியது.

சென்னை குன்றத்தூர் மூன்றாம் கட்டளை பகுதியைச் சேர்ந்த விஜய் (30), தனியார் வங்கியில் பணியாற்றி வந்தவர். இவரது மனைவி அபிராமி (25), டிக்டாக் செயலி மூலம் பிரபலமடைந்தவர்.

இவர்களுக்கு அஜய் (6) மற்றும் கார்னிகா (4) என்ற இரு குழந்தைகள் இருந்தனர். அபிராமிக்கு அதே பகுதியில் பிரியாணி கடையில் பணியாற்றிய மீனாட்சி சுந்தரத்துடன் கள்ளக்காதல் உறவு ஏற்பட்டது.

இந்த உறவு காரணமாக, கணவர் விஜய்யுடன் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததாகக் கருதி, அபிராமி தனது குழந்தைகளை கொலை செய்ய முடிவெடுத்தார்.

2018 செப்டம்பர் மாதம், அபிராமி தனது குழந்தைகளான அஜய் மற்றும் கார்னிகாவுக்கு பாலில் அதிக அளவு தூக்க மாத்திரைகள் கலந்து கொடுத்தார். மேலும், மகன் அஜய்யை கழுத்தை நெரித்து கொலை செய்தார்.

கணவர் விஜய்யையும் கொலை செய்ய திட்டமிட்டிருந்தாலும், அவர் அன்று வீட்டுக்கு வராததால் உயிர் தப்பினார். இதைத் தொடர்ந்து, அபிராமி மீனாட்சி சுந்தரத்துடன் நாகர்கோவிலுக்கு தப்பிச் செல்ல முயன்றார்.

ஆனால், சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் போலீசாரால் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.