யாழ்ப்பாணம் - கண்டி பிரதான வீதியில் வவுனியா, களுக்குன்னமடுவ பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரண்டு போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகளை மோதிவிட்டுத் தப்பிச் சென்ற லொறி சாரதி ஒருவர் இன்று (24) காலை கைது செய்யப்பட்டுள்ளார். கட்டளையை மீறி பயணித்த சிறிய லொறி ஒன்றை பொலிஸ் அதிகாரிகள் இருவரும் பின்தொடர்ந்து சென்றபோதே, லொறி சாரதி பொலிஸ் அதிகாரிகளை விபத்துக்குள்ளாக்கிவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மோட்டார் சைக்கிளை விபத்துக்குள்ளாக்கிய போது பொலிஸ் அதிகாரிகள் இருவரும் தூக்கி வீசப்பட்டு வீதியின் ஒரு ஓரத்தில் விழுந்துள்ளதுடன், மோட்டார் சைக்கிள் லொறியில் சிக்கி இழுத்துச் செல்லப்படும் காட்சி பின்னால் வந்த வாகனத்தில் இருந்த ஒருவரின் கையடக்கத் தொலைபேசியில் பதிவாகியிருந்தது. லொறியில் மோட்டார் சைக்கிள் சிக்கிக் கொண்டமையினால், லொறியை வீதியில் கைவிட்டு சாரதி காட்டுப் பகுதிக்குள் தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பூஓய பாலத்திற்கு அருகிலுள்ள இராணுவ முகாம் திசையில் சந்தேகநபர் தப்பிச் சென்றுகொண்டிருந்த போது, இராணுவத்தினர் அவரைக் கைது செய்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். விபத்தில் காயமடைந்த இரண்டு பொலிஸ் அதிகாரிகளும் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபரையும் லொறியையும் வவுனியா நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் ஈரட்டைபெரியகுளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
