தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்பில் நிலவிய தாழமுக்கமானது தற்போது முல்லைத்தீவிற்கு அண்மையிலுள்ள கடற்கரை ஊடாக நாட்டிற்குள் பிரவேசித்து வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நேற்று (10) காலை 11.30 மணியளவில் முல்லைத்தீவிலிருந்து கிழக்குத் திசையில் சுமார் 20 கிலோமீற்றர் தொலைவில் இந்த தாழமுக்கம் நிலைகொண்டிருந்தது. இந்த தாழமுக்கமானது இன்று (11) ஆகும்போது ஒரு குறைந்த அழுத்தப் பிரதேசமாக வலுவிழக்கக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இதன் காரணமாக அடுத்த 24 மணித்தியாலங்களில் வடக்கு மாகாணத்தில் மணித்தியாலத்திற்கு 50-60 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். அத்துடன் இடைக்கிடையில் மணித்தியாலத்திற்கு 70 கிலோமீற்றர் வரையான வேகத்தில் மிகவும் பலத்த காற்று வீசக்கூடும். திருகோணமலை மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் மணித்தியாலத்திற்கு 40-50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். நாட்டின் வடக்குப் பாதியில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். வடக்கு மாகாணம் மற்றும் புத்தளம், அனுராதபுரம், திருகோணமலை மாவட்டங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும். குறிப்பாக வடக்கு மாகாணத்தின் சில இடங்களில் 100 மி.மீ இற்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.
