விவசாய, கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் கீழ் இயங்கும் விவசாயக் காப்புறுதிச் சபையானது, விவசாயிகளின் நலன் கருதி 2026 பெப்ரவரி மாதத்தைக் காப்புறுதி மாதம் என அறிவித்துள்ளது.நெல், மக்காச்சோளம், உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம், சோயா பீன்ஸ் மற்றும் மிளகாய் உள்ளிட்ட அனைத்துப் பயிர்களுக்கும் காப்புறுதி பெற்றுக்கொள்ள முடியும். வறட்சி, வெள்ளம், காட்டு யானைகளின் தாக்குதல், பூச்சித் தாக்கம், தீ விபத்து மற்றும் பயிர் நோய்களால் ஏற்படும் சேதங்களுக்கு இந்தத் திட்டத்தின் மூலம் இழப்பீடு வழங்கப்படும். மிகக் குறைந்த காப்புறுதித் தவணைப்பணத்தைச் செலுத்துவதன் மூலம், இயற்கை அனர்த்தங்கள் உள்ளிட்ட அனைத்துப் பயிர்ச் சேதங்களுக்கும் உரிய காப்பீட்டுத் தொகையைப் பெற முடியும்.பயறு, உளுந்து, குரக்கன், நிலக்கடலை, எள்ளு போன்ற பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.60,000 இழப்பீட்டைப் பெறுவதற்கு, காப்புறுதித் தொகையில் 7 வீதத்தை தவணைப்பணமாகச் செலுத்த வேண்டும். வள்ளிக்கிழங்கு, மரவள்ளி, பீட்ரூட், கோவா, கரட், லீக்ஸ், வெங்காயம், தக்காளி போன்ற பயிர்களுக்கும் காப்புறுதித் தொகையில் 7 வீதத்தை செலுத்துவது போதுமானதாகும். உதாரணமாக வள்ளிக்கிழங்குச் செய்கையில் ஏக்கர் ஒன்றுக்கு ரூ.100,000 காப்புறுதிப் பாதுகாப்பைப் பெற, ரூ.7,000 ஐத் தவணைப்பணமாகச் செலுத்த வேண்டும். மேலும் இஞ்சி, மஞ்சள், கருவா, மிளகு, அன்னாசி, பப்பாளி மற்றும் வாழை போன்ற நீண்டகாலப் பயிர்களுக்கும் மிகவும் சலுகை அடிப்படையிலான மற்றும் கவர்ச்சிகரமான காப்புறுதித் திட்டங்களைச் சபை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, சாத்தியமான பயிர்ச் சேத அபாயங்களிலிருந்து பாதுகாப்பைப் பெற்றுக்கொள்ளுமாறு விவசாயக் காப்புறுதிச் சபை விவசாயிகளைக் கேட்டுக்கொண்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விபரங்களை கொழும்பிலுள்ள தலைமை அலுவலகம் அல்லது மாவட்ட அலுவலகங்களில் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
