கொள்ளுப்பிட்டி, ஆர்.ஏ. டி மெல் மாவத்தையில் அமைந்துள்ள இசைக்கல்லூரி ஒன்று இயங்கும் கட்டிடத்தை நோக்கி இன்று (25) அதிகாலை 2.35 மணியளவில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர், குறித்த கட்டிடம் மற்றும் அதன் நுழைவாயிலை நோக்கி டி-56 ரக துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக கொள்ளுப்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த கல்லூரிக்கு முன்னால் வெற்றுத் தோட்டாக்கள் காணப்படுவதாக கொள்ளுப்பிட்டி பொலிஸாருக்குக் கிடைத்த தொலைபேசித் தகவலின் அடிப்படையில், நிலையப் பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸ் குழுவினர் அங்கு சென்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரில், பின்னால் அமர்ந்திருந்தவர் திடீரென கட்டிடத்தையும் நுழைவாயிலையும் நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தும் காட்சிகள் அங்கிருந்த CCTV கெமராவில் பதிவாகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். இந்த துப்பாக்கிச் சூட்டில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்பதோடு, எந்த நோக்கத்தில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது என்பது இதுவரை கண்டறியப்படவில்லை. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
