கொழும்பில் உள்ள ஒரு தனியார் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர், அதே பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தில் பயிலும் தனது காதலியைச் சந்திக்கும் நோக்கத்தில், போலி அடையாள அட்டையைப் பயன்படுத்தி மொரட்டுவப் பல்கலைக்கழகத்திற்குள் நுழைய முயன்றபோது, மொரட்டுவ தலைமையகப் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபர், மாத்தறைப் பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞர் ஆவார். மொரட்டுவப் பல்கலைக்கழகத்தின் பிரதான வாயில் வழியாக உள்ளே நுழைய முயன்ற அவர், தான் அந்தப் பல்கலைக்கழகத்தின் மாணவர் என்று கூறியுள்ளார்.
இதன்போது அங்கு இருந்த பாதுகாப்பு அதிகாரிகள் அவரிடம் அடையாள அட்டையைக் கேட்டுச் சோதித்தனர். அச்சமயத்தில், அவர் சமர்ப்பித்த அடையாள அட்டை போலியானது என்பதைப் பாதுகாப்பு அதிகாரிகள் கண்டறிந்தனர்.
இதனையடுத்து, மாணவர் குறித்து குறித்துப் பல்கலைக்கழகத்தின் ஒழுக்காற்றுப் பொறுப்பாசிரியருக்குத் தகவல் தெரிவித்த பின்னர், அந்த மாணவர் மொரட்டுவ தலைமையகப் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
காவல்துறையினர் நடத்திய விசாரணைகளின்போது, குறித்த அடையாள அட்டை போலியாகத் தயாரிக்கப்பட்டது என்பது உறுதி செய்யப்பட்டது.
காவல்துறையினரின் விசாரணையின்போது, தான் ஒரு தனியார் பல்கலைக்கழகத்தில் பயின்று வருவதாகவும், மொரட்டுவப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தில் முதலாம் ஆண்டு மாணவியாகப் பயிலும் தனது காதலியைச் சந்திப்பதற்காகவே இந்தப் போலி அடையாள அட்டையைத் தயாரித்ததாகவும் சந்தேகத்திற்குரிய மாணவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
ஆள்மாறாட்டம் மற்றும் சட்டவிரோதமாக அத்துமீறி நுழைதல் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் அந்த மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார். அத்துடன் காதலன் பயன்படுத்திய போலி அடையாள அட்டையும் காவல்துறையினரின் பொறுப்பில் எடுக்கப்பட்டுள்ளது.
சந்தேகத்திற்குரிய அந்த மாணவர் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்கும், அவரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கும் காவல்துறையினர் ஏற்பாடுகளைச் செய்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள், மேற்குத் தென் பிரிவின் பொறுப்புக்குரிய பிரதிப் காவல்துறை மா அதிபர் சமந்த விஜேசேகரவின் மேற்பார்வையின் கீழும், மவுண்ட் லாவினியா பிரிவின் பொறுப்புக்குரிய சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் அசோக குணசேகரவின் அறிவுறுத்தல்களின் பேரிலும், மொரட்டுவ தலைமையகக் காவல் நிலையப் பொறுப்பதிகாரியான பிரதம பரிசோதகர் நிஹால் பிரான்சிஸின் தலைமையிலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
