விசேட அரசாங்க விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ள புதன்கிழமைகளில், மேலதிக வகுப்புக்களை நடத்துவது தடைசெய்யப்பட்டுள்ளதாக அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்.
போதுமான அளவு எரிபொருள் கையிருப்பில் உள்ள போதிலும் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய நெருக்கடிகளை கருத்திற்கொண்டு ஒவ்வொரு வாரமும் புதன் கிழமையை அரச விடுமுறை தினமான பிரகடனப்படுத்தப்பட்டது.
இந்த விசேட விடுமுறையானது அரச அலுவலகங்கள், பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் நீதிமன்றங்கள் உள்ளிட்ட அனைத்து அரச நிறுவனங்களுக்கும் பொருந்தும் என அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்திருந்தார்.
அதன்படி தேவையற்ற பயணங்கள் மற்றும் எரிபொருள் விரயத்தைக் குறைக்கும் நோக்கில், அனைத்து அரச நிகழ்வுகளும் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளன.
அரசாங்கம் முன்னெடுத்துள்ள இந்த வேலைத்திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில், தனியார் நிறுவனங்களும் இதேபோன்ற விடுமுறை அல்லது வேலை நேர ஒழுங்கமைப்புகளை பின்பற்றுவது குறித்து பரிசீலிக்குமாறு ஆணையாளர் நாயகம் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த நிலையிலேயே மேலதிக வகுப்புகள் தொடர்பான குறித்த அறிவிப்பு வெளிவந்துள்ளது.
